T Nagar: சீட்டே இல்லை! பதவி எதுக்கு? ராஜினாமா செய்த திநகர் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தி.நகர் தொகுதியில் சீட் ஒதுக்கவில்லை என்ற விரக்தியால் சிட்டிங் எம்எல்ஏ கருணாநிதி, திமுக செயலாளர் என்ற பொறுப்பை ராஜினாமா செய்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதற்கான வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் அறிவித்திருந்தார். அதில் சென்னை திநகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் கருணாநிதி, மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் சகோதரர் ஆவார்.
கருணாநிதி, சென்னை தென்மேற்கு திநகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் திநகர் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கருணாநிதி எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஆனால் திநகர் தொகுதியில் போட்டியிட கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்கவில்லை, அவருக்கு பதிலாக திநகர் தொகுதி வேட்பாளராக திமுக எம்எல்ஏ அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் அறிவிக்கப்பட்டார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் விரக்தியில் இருந்த கருணாநிதி, திநகர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு வணக்கம்,
தியாகராயர் நகர் கிழக்கு பகுதி செயலாளராக பல ஆண்டு காலம் கடுமையாக உழைத்துள்ளேன். அந்த உழைப்பிற்கும்,நேர்மைக்கும், கழகம் மேல் இருந்த பற்றிற்கும் தற்போது மதிப்பில்லாத காரணத்தினால் எனது கழக பகுதி செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். எனக்கு ஒத்துழைப்பு அளித்த கழகத் தலைவர் அவர்களுக்கும் பிற நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது போல் தாம்பரம் தொகுதியில் மீண்டும் சீட் கிடைக்காததால் எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் திமுக எம்பி டி.ஆர்.பாலுவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அது போல் அண்ணா அறிவாலயத்திலும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.












Click it and Unblock the Notifications