உதயநிதி திறமைசாலின்னு சொல்லுங்க.. அதைவிட்டு விட்டு ஏதேதோ பேசுவது நேருவுக்கு அழகல்ல! -ராஜேஸ்வரிப்ரியா
சென்னை: உதயநிதி திறமைசாலி, அதனால் தான் அமைச்சர் ஆனார் என்று பேசுவதை விட்டுவிட்டு, தலைவர் வீட்டு பொம்மை அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்போம் என்கிற வகையில் அமைச்சர் நேரு பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என ராஜேஸ்வரி பிரியா விமர்சித்துள்ளார்.
மேலும், தனக்கு பதவி கிடைத்தால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கிற வகையில் அமைச்சர் நேரு பேசியிருப்பது சிறுமையானது என சாடியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

மூத்த அரசியல்வாதி
''அமைச்சர் கே.என்.நேரு தமிழகத்தில் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவராக உள்ளார். அவர் கூறுகிறார் உதயநிதியின் மகன் வந்தாலும் ஆதரிப்போம்னு, அதற்கு காரணம் சொல்கிறார் எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்த குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்போம் என்று. என்னுடைய முதல் கேள்வி திரு நேரு அவர்களிடம் அரசியல் என்பதனை மக்கள் பணி என்று கருதாமல் சுயநலத்திற்கான ஒன்றாக கருதி தனக்கு பதவி கிடைத்தால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று வெளிப்படையாக ஒப்பு கொள்வது தங்களுக்கு சிறுமையாக தெரியவில்லையா?''

நேருவுக்கு கேள்வி
''இரண்டாவது கேள்வி திமுகவை கருணாநிதி குடும்பத்தின் சொத்து போல் எண்ணி அவர்கள் குடும்பத்தை பண்ணையார் குடும்பமாக கருதி கட்சியில் உள்ள அனைவரும் வேலைப் பார்க்கும் பணியாட்கள் போல நடந்து கொள்வது மற்றும் அடிமைகள் போல் பேசி வருவது என்பதெல்லாம் கொள்கையால் உருவாக்கபட்ட கட்சியினை கொலை செய்வதற்கு சமமாக தோன்றவில்லையா? சுயமரியாதை, சமூக நீதி எல்லாம் எங்கே போனது? பதவி எனும் வங்கியில் அடமானம் வைக்கபட்டதா?''

கே.என்.நேரு பேச்சு
''கொள்கை என்பதெல்லாம் உங்கள் கொடி கம்பத்தின் கீழே பறக்கப்பட்டு விட்டதா? திமுகவின் தொண்டர்கள் யார் ? எப்படி கட்சி உருவானது என்றெல்லாம் உங்களுக்கு தெரியுமா? இல்லையா? பாவம் பல ஆண்டுகள் கட்சிக்காக உண்மையாக உழைத்த தொண்டர்கள். திமுகவின்
அழிவை நோக்கிய பயணத்தின் தொடக்கமே உங்களை போன்றோரின் பேச்சு.''

உதயநிதி திறமைசாலி
''ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்வு செய்யபட்டே சட்டமன்ற உறுப்பினராக வென்றோம் என்பதனை மறந்து , தலைவர் குடும்பத்திற்கு துதி பாடுவதாலேயே அமைச்சர் பதவியில் இருக்கிறோம் என்று விளக்கும் உங்கள் கருத்து அடுத்த தலைமுறைக்கு தவறான முன் உதாரணமாக உள்ளது.
உதயநிதி திறமைசாலி அதனால் தான் அமைச்சர் ஆனார் என்று கூறுங்கள். அதை விட்டுவிட்டு தலைவர் வீட்டு பொம்மை அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்போம் என உங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களை இழிவு செய்யாதீர்கள்.'' இவ்வாறு ராஜேஸ்வரி பிரியா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications