பெரியார் பிறந்தநாளன்று... சமூக நீதி நாள்... அரசு அலுவலகங்களில் ஏற்க வேண்டிய உறுதிமொழி இது தான்..!
சென்னை: பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் அரசு அலுவலகங்களில் ஏற்க வேண்டிய உறுதிமொழி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 6-ம் தேதியன்று 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தார்.

இதற்கு வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்ததோடு இதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அது தொடர்பான அரசாணையில்;
சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை மத வேறுபாடுகளை உதறித்தள்ளி, பெண்களை சமநிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் பிறந்ததினமான செப்டம்பர் 17-ம் தேதி அன்று ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் ''சமூக நீதி நாள்'' உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் விதமாக பின்வரும் உறுதிமொழியை அனுசரிக்க முடிவுசெய்து அரசு ஆணையிடுகிறது.
அதன்படி பின்வருமாறு உறுதிமொழி வாசகங்கள் வெளியிடப்பட்டுள்ளன;
''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பன்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன் !
சுயமரியாதை ஆளுமைத் திறனும் -பகுத்தறிவுக் கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்..!
சமத்துவம் , சகோதரத்துவம், சமதர்மம், ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்..!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்..!
சமூகநீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்..!''
இவ்வாறு அரசு அலுவலகங்களில் ஏற்க வேண்டிய உறுதிமொழியை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.
மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதும் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமாணம் என்பதும் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் ஆகும். சாதி ஒழிப்பும், பெண் அடிமைத்தனம் ஒழிப்பும் தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன. பெரியார் போட்ட அடித்தளத்தால் தான், இன்று தேசிய அளவில் சமூகநீதிக் கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications