"அவர்" ஜெயிக்காவிட்டால் குழந்தையை கொல்வேன்னு தாய் தாய் சொல்வதா.. முன்னாள் நீதிபதி கிருபாகரன் வேதனை
சென்னை: போட்டியிடுகின்ற எல்லா கட்சிகளும் வெற்றி பெற முடியாது, எனவே வெற்றியோ தோல்வியோ எதனையும் தாங்கிக் கொள்ளக்கூடிய மனநிலை வேண்டும் என்று ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "குறிப்பிட்ட கட்சியினரின் சமூக வலைதள பதிவுகளால் இளம் தலைமுறையினர், குழந்தைகள் நடந்துகொள்வது வேதனையாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு முன்பே இந்த கட்சி தான் வெற்றி பெறும் என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதனால் இந்த முடிவுகள் அப்படியே தேர்தல் ரிசல்ட் அன்று எதிரொலிக்காமல் போனால் குழந்தைகள், இளம் தலைமுறையினர் விபரீத முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது என அரசியல் தலைவர்கள் பலரும் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். எல்லாத்தையும் தாங்கிக்கொள்ளும் மனநிலை வேண்டும். விபரீத முடிவுகள் எடுத்துவிட கூடாது என்று ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: -
17-வது தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. மகிழ்ச்சி என்னவென்றால் அதிக வாக்குப்பதிவு சதவீதம் பதிவாகியுள்ளது. அதிர்ச்சி என்னவென்றால், இளம் தலைமுறையினர், குழந்தைகள் நடந்துகொள்வது வேதனையாக இருக்கிறது. குறிப்பிட்ட கட்சியினரின் சமூக வலைத்தள பதிவுகள் வேதனை அளிக்கிறது. இந்த சட்டசபை தேர்தல் புதுமையாக இருக்கிறது.
4 கட்சிகள் போட்டியில் உள்ளன. ஆனால் 4 கட்சிகளும் வெற்றி பெற முடியாது. அவர் அவர்கள் தங்கள் கட்சிகள் வெற்றி பெறும் என்று சொல்லி வருகிறார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டு நான் சொல்கிறேன், என் தலைவர் தான் வெற்றி பெற வேண்டும், என் கட்சி தான் வெற்றி பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். வெற்றி பெற்றால் கொண்டாடிவிடலாம். வெற்றி பெறாவிட்டால் அதனை தாங்கிக் கொள்ள வேண்டிய மனநிலை இருக்க வேண்டும்.
இந்த மனநிலை இப்போது இருக்கின்ற குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இருக்கிறதா என்றால் இல்லை. சமூக வலைத்தளத்தில் வரும் செய்திகள் எல்லாம் மன வருத்தத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது. ஒரு பெண்மணி சொல்கிறார், இவர் வெற்றி பெறவில்லை என்றால் என் குழந்தைகளை கொன்று விட்டு இறந்துவிடுவேன் என சொல்கிறார். இப்படி நிறைய பேர் எதாவது ஒன்றை சொல்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது.
என்னுடைய கட்சி மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்றால், அந்த கட்சி மட்டுமே தான் தேர்தலில் போட்டியிட வேண்டும். பெரும் தலைவர்களே தோற்று போய் இருக்கிறார்கள். எனவே எல்லா அரசியல் தலைவர்களும் அறிக்கை வெளியிட வேண்டும். நீங்கள் அனைவரும் கண்டிப்பாக அறிக்கை வெளியிட வேண்டும். இளம் தலைமுறையினருக்கு தேர்தல் தோல்வி மற்றும் வெற்றியை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. யாரும் எந்த வித விபரீத முடிவும் எடுக்கக் கூடாது என்பதற்காக எல்லா அரசியல் தலைவர்களும் அறிக்கை வெளியிட வேண்டும்.
எப்படி ஓட்டு கேட்டார்களோ, அதே போல இளம் தலைமுறையினருக்கு அறிக்கையும் முக்கியமானது. ஏனென்றால் அவர்கள் சொன்னால் தான் கேட்பார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் இதனை செய்ய வேண்டும். அது மிக மிக அவசியமான சமூக கடமை ஆகும். சினிமா நடிகர்களும் இது குறித்து மக்களுக்கு சொல்ல வேண்டும். வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாக நாம் இதனை செய்ய வேண்டும்.
எல்லாரும் நம்ம கட்சி தான் வெற்றி பெறும் என நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஜனநாயக நாட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். பெரிய தலைவர்கள் கூட தோற்றுப் போய் இருக்கிறார்கள்.. அதிர்ச்சிகரமான சம்பவங்கள் எல்லாம் நடக்கும் என்று அரசியல் தலைவர்கள் சொல்கிறார்கள். எனவே இது மிக தீவிரமான பிரச்சினை. தேர்தலுக்கு முன்பே இதனை செய்ய வேண்டும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications