ஒரே ஒரு ஏடிஎம் தான்.. கிளாம்பாக்கத்தில் பரிதவிக்கும் பயணிகள்.. நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே ஒரு ஏடிஎம் தான் இருப்பதாகவும், இதனால் அவசரத்திற்கு பணம் எடுக்க சென்றால் கூட ஏடிஎம்மில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும் கூடுதல் ஏடிஎம்கள் வைக்க அரசுக்கு பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தொலைதூரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து முனையம் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் பயணிகள் பயன்பாட்டுக்கு இந்த பேருந்து முனையம் கொண்டு வரப்பட்டது. எனினும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முழுமையான வசதிகள் செய்து முடிக்கும் முன்பே பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக போதிய கடைகள் இல்லை என்பதில் தொடங்கி ஏடிஎம் வசதி கூட இல்ல என்ற புகார் வரை பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.
அதேபோல ஜிஎஸ்டி சாலையை கடக்க மேம்பாலம் அமைக்காமல் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்தது, சென்னை மக்கள் ஊருக்குள் செல்ல 30 கிமீ தூரம் செல்ல வேண்டும், டவுன் பஸ் ஏறவே அரை கிமீ சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. எனினும், நாளடைவில் படிப்படியாக இந்த குறைகளை போக்க அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே ஒரு ஏடிஎம் மையம் மட்டுமே உள்ளதாகவும், அதில் இருந்த 2 ஏடிம் எந்திரத்தில் ஒன்று பழுதடைந்துவிட்டதால் ஒரு ஏடிஎம்மில் மட்டுமே பணம் எடுக்க முடிகிறது என்றும், அதிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தான் பணம் எடுக்கும் நிலை உள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டமாக இருக்கும் நேரத்தில், பெரும்பாலான பயணிகள் ஏடிஎம்மில் பணம் எடுக்க குவிவதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்களை பிடிக்க முடியாத சூழல் நிலவுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அருகில் வேறு ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்க வேண்டும் என்றால் 2 கி.மீ தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் ஏடிஎம்கள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
முதலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏடிஎம் எந்திரமே இல்லாமல் இருந்தது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் இங்கு ஏடிஎம் மையம் வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரிலேயே இங்கு ஏடிஎம் மையம் வைக்கப்பட்டது. இதில் 2 ஏடிஎம் எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. தற்போது அதில் ஒரு ஏடிஎம் எந்திரம் பழுதடைந்ததால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications