அறிவாலயம் நோக்கி.. மேலும் பல தலைகள் உருண்டு வரப் போகுதாமே!
மேலும் சில புள்ளிகள் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: அதிமுக மற்றும் அமமுகவிலிருந்து மேலும் பல முக்கியத் தலைகள் திமுகவை நோக்கி படையெடுக்க காத்திருப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது. அமமுவிலிருந்து ஒரு விக்கெட் இழந்த நிலையில், அடுத்தடுத்த விக்கெட்டுகளும் சரியும் என்று கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜிதின் சமீபத்தில் கட்சி தாவல்களுக்கு முதல் போணி, பிள்ளையார் சுழி. செந்தில் பாலாஜி திமுகவில் இணைய போகிறார் என்று அரசல் புரசலாக செய்தி வந்தபோதே தமிழக அரசியல் களம் விறுவிறுப்பானது.
திமுவில் இணைவார் என்று ஒரு பக்கமும், இல்லை, இல்லை எங்களை விட்டுபோகவே மாட்டார் என்று மற்றொரு பக்கமும் அறிக்கைகள் மீடியாவை சுழன்று வந்தன.
அதகளம்
இந்நிலையில், தேனாம்பேட்டையே அதகளப்படுத்தும் அளவுக்கு பட்டாசுகள் வெடிக்க, ஆதரவாளர்கள் முழக்கத்துடன் திரும்பவும் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜி இல்லாத அமமுக வெறுமையாக உள்ளதாக கூறப்படுகிறது.
விழிக்கின்றனர்
முன்னாள் அமைச்சர், கட்சியின் வலது கரம், பசை உள்ள பார்ட்டி என இத்தனை பக்கபலத்தையும் பக்கத்தில் வைத்து கொண்டிருந்த செந்தில் பாலாஜிக்கே இந்த நிலை என்றால், தொகுதி பக்கம் போகாமல், பணத்தையும் சம்பாதிக்காமல் மக்களின் எதிர்ப்பை மட்டுமே சம்பாதித்து, நாளைய நிலை என்னவென்று கூட தெரியாமல் மற்ற ஆதரவு தரப்புகள் விழித்து கொண்டிருக்கின்றன.
"முன்னாள்கள்"
இதில் ஒரு சிலரையும் திமுக பக்கம் அழைத்துபோக செந்தில் பாலாஜியே முயன்றதாகவும் சொல்லப்பட்டது. நம்பிக்கை இருந்தால் என்னுடன் வாருங்கள் என்றுகூட மறைமுகமாக சொன்னாராம். அமமுகவில் இப்படி என்றால், அதிமுகவின் பதவி பறித்த, பதவியை இழந்த "முன்னாள்கள்"கூட அறிவாலயம் பக்கம் போக ரெடி ஆகி விட்டார்களாம்.
மாஸ்டர் பிளான்
ஆட்சிக்கு வந்து 2 வருஷமாகியும் தங்களை சரிவர கவனிக்காத இந்த முன்னாள்கள் இனி தாய்க்கழகத்தை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். தானாக மனம் மாறுதல்கள் ஒருபுறம் நடக்கிறது என்றால், மறுபக்கம் மாஸ்டர் பிளானை பக்காவாக செய்து வருகிறது திமுகவும்.
சேகர் பாபு
ஸ்டாலினின் பலம் தமிழகத்தில் பெருகி வரும் நிலையில், அணி மாறும் "பெரிய தலைகள்" எல்லோருமே திமுகவைதான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவேளை அணி மாறி போனால் சேகர் பாபு போல திமுக நம்மையும் கவனிக்கும் என்றும் நம்புகிறார்கள்.
திரும்பவும் பட்டாசு சத்தம்
ஒரு பசையுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் உள்ளிட்ட சிலர் திமுக பக்கம் தாவ தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அதிமுகவிலிருந்து பலரும் திமுக பக்கம் வருவார்கள் என்றும் சொல்கிறார்கள். எனவே எந்த நேரத்திலும் அறிவாலயத்தில் பட்டாசு சத்தம் திரும்பவும் கேட்கலாம் என்று கூறப்படுகிறது.