பெரியார் சிலையை பார்த்தே சிலருக்கு பயம்.. பாஜகவை மறைமுகமாக கிண்டல் செய்த கனிமொழி!
சென்னை: பெரியார் சிலையை பார்த்தே சிலருக்கு பயம் ஏற்படுவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஸ்ரீரங்கம் கோவில் முன் இருக்கும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பாஜக பிரமுகர் கனல் கண்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து கனல் கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் கைதுக்கு அஞ்சி கனல் கண்ணன் தலைமறைவானார்.
இதன்பின்னர் கோவில்களுக்கு முன் மட்டுமே பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், மசூதி மற்றும் சர்ச் ஆகியவற்றுக்கு முன் பெரியார் சிலை இல்லை என்று சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதில் உண்மையில்லை என்று ஆதாரப்பூர்வமாக பலரும் புகைப்படங்களை வெளியிட்டு பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழ் பேரவை அறக்கட்டளையின் கலைஞர் மன்றத்தில் திமுக மகளிரணி சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.
கனிமொழி தெய்வம் இல்லை என்று சொல்லும்.. ஆனால் கலைஞர் ஒரு தெய்வம் தான்.. தழுதழுக்கும் துரைமுருகன்!
அப்போது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாட்டில் உள்ள சிலருக்கு பெரியாரின் சிலையை பார்த்தே பயம் ஏற்படுகிறது. அவர்கள் என்ன செய்தாலும், தமிழ்நாட்டில் இருந்து பெரியாரின் கொள்கையை எடுத்துவிட முடியாது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெற்று தந்த சமூகநீதி உரிமைகளை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு உடைத்துக் கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
Recommended Video
என்எல்சி நிறுவனத்தின் வேலைவாய்ப்புகளில் தமிழக பொறியாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். என்எல்சி அமைவதற்கு இடம்கொடுத்த பொதுமக்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்புகளில் சலுகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அப்போது உறுதியளித்தது. ஆனால் இன்று தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு விவகாரத்திலும் நமது உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது என்று விமர்சித்தார்.