பள்ளி மாணவி தற்கொலையில் பிரச்சினையை உருவாக்குகின்றனர்.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு பரபர குற்றச்சாட்டு
சென்னை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்தை வைத்து தமிழகத்தில்பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றனர் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு குற்றம் சாட்டியது.தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி, சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் தினமும் குறையும் கொரோனா தொற்று.. சென்னையில் எத்தனை பேருக்கு பாதிப்பு?
இவர் தங்கியிருந்த விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக அந்த மாணவி தனது மரணப்படுக்கையில் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை
வார்டன் சகாயமேரியை (62) ஏற்கனவே போலீஸார் கைது செய்தனர். மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாஜக தனியாக விசாரணை குழு அமைத்துள்ளது. மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணமில்லை என அரசு தரப்பிலும், பள்ளி நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக வைக்கும் குற்றச்சாட்டு
குடும்ப பிரச்சினை காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர். மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். செல்போன், சிடி உள்ளிட்ட பொருட்களை ஹைதராபாத் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்க வேண்டும் என்று மாணவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை
இதனை தொடர்ந்து தமிழக அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் வாதாடுகையில் 'இந்த வழக்கில் இதுவரை 53 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வாக்குமூலங்கள் முழுமையாக பதிவு செய்யப்படுகிறது.அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படுகிறது. வழக்கில் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. மாணவியின் வீடியோ ஜன. 17-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜன. 20 வரை மதமாற்றம் தொடர்பான சர்ச்சை ஏதும் எழவில்லை.
பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றனர்
மாணவி உயிரிழக்கும் வரை காத்திருந்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதில் உள்நோக்கம் உள்ளது. தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர். டிஎஸ்பி நேர்மையாக விசாரணை நடத்தி வருகிறார்' என்று அவர் கூறினார். ''எங்கள் பள்ளியில் யாரும் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை'' என்று மாணவி படித்த பள்ளி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.