அதிகாரம் வேணும்னா.. அதிமுகவோடு கூட்டணி வையுங்கள்.. காங்கிரசில் எழுந்த கலகக்குரல்.. என்ன சொல்றீங்க?
சென்னை: காங்கிரஸ் கட்சிக்குள் சில சீனியர்கள் மட்டும், 'கட்சி அழிஞ்சிக்கிட்டு இருக்கு. காங்கிரஸ் வளரணும்னா திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும். அது மட்டுமல்ல, கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தயாராக இருக்கிறது. அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது அவசியம்' என அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள், என்று தகவல்கள் வர தொடங்கி உள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராக கிரிஸ் ஜோடங்கரை கடந்த மாதம் நியமித்தது கட்சியின் அகில இந்திய மேலிடம். பொறுப்பாளராக நியமிக்கப்பட்டப் பிறகு முதன்முறையாக கடந்த 3-ந்தேதி சென்னை வந்தார் கிரிஸ்.

அண்ணாசாலையில் உள்ள கன்னிமாரா ஹோட்டலில் அவருக்கு ரூம் போட்டிருந்தது காங்கிரஸ் கட்சி. கிரிஸ்சும் ப.சிதம்பரமும் நெருங்கிய நண்பர்களாம். அதனால், கோவாவிலிருந்து சென்னைக்கு கிரிஸ் கிளம்பும் முன்பு, சிதம்பரத்திடம் பேசியிருக்கிறார்.
"சென்னைக்கு வாருங்கள் உங்களை சந்திக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார் ப.சி. ! அதன்படி, 3-ந்தேதி இரவே கன்னிமாரா ஹோட்டலில் கிரிஸ், ப.சி. சந்திப்பு நடந்திருக்கிறது. சிதம்பரத்திடம் தமிழக அரசியல் சூழலையும், காங்கிரஸ் தலைவர்களின் அரசியல் சிந்தனைகளையும் சிதம்பரத்திடம் கேட்டறிந்துள்ளார் கிரிஸ். அப்போது, "திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையானது. இந்த கூட்டணி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரவேண்டும்.
திமுக கூட்டணி
திமுகவுக்கு இருக்கும் அரசியல் கட்டமைப்பு காங்கிரஸுக்கு பலம் சேர்க்கிறது. எதார்த்தமான அரசியல் இதுதான். இதனை நாம் மறந்தால் நம்மை நாமளே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், தனக்கான லாபம் என்பதை உணர்ந்தே அரசியல் செய்பவர்கள். கட்சிக்கு எது உகந்தது என்பதை அவர்கள் யோசிப்பதில்லை.
இன்றைய சூழலில், தேர்தல் வந்தாலும் திமுக கூட்டணிதான் ஜெயிக்கும்" என்றெல்லாம் கிரிஸிடம் பகிர்ந்து கொண்டாராம் சிதம்பரம். தமிழக அரசியல்பற்றி தம்மிடம் உள்ள கேள்விகளுக்கு ப.சி.யிடம் கேட்டு தெளிவாகியிருக்கிறார் கிரிஸ். சிதம்பரம் அங்கிருந்து சென்றபிறகு செல்லக்குமார், பீட்டர் அல்போன்ஸ் சந்தித்துள்ளனர். மறுநாள் சத்தியமூர்த்திபவனுக்குச் சென்றார் கிரிஸ் ஜோடங்க். அவரை திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி.க்கள் ஜெயக்குமார், விஸ்வநாதன் உள்பட மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் தனித்தனியாக சந்தித்தனர். காங்கிரஸ்காரர்களிடம் சந்திப்பை முடித்துவிட்டு டெல்லிக்கு பறந்தார் கிரிஸ்.
சீனியர்கள் அழுத்தம்
சந்திப்பு குறித்து சத்தியமூர்த்திபவன் வட்டாரங்களில் விசாரித்தபோது, "மேலிட பொறுப்பாளர் மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளராக யார் நியமிக்கப்பட்டாலும், அவரை சந்திக்கும் நிர்வாகிகள் வழக்கமாக சொல்லும் கருத்துக்களைத்தான் இப்போதும் சொன்னார்கள். அதாவது, தலைவர் பதவியில் இருக்கும் செல்வப்பெருந்தகையை மாற்றுங்கள் என முறையிட்டனர்.
சில சீனியர்கள் மட்டும், 'கட்சி அழிஞ்சிக்கிட்டு இருக்கு. காங்கிரஸ் வளரணும்னா திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும். அது மட்டுமல்ல, கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தயாராக இருக்கிறது. அந்த கட்சியுடன் நாம் கூட்டணி வைத்தால் ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு கிடைக்கும். 50, 60 ஆண்டுகாலமாக அரசியல் அதிகாரம் காங்கிரஸுக்கு கிடைக்கவே இல்லை. அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது அவசியம்' என அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மேலிட பொறுப்பாளரோ, கூட்டணி பத்தியெல்லாம் இப்போ தேவையற்ற பேச்சு. திமுகவுடன் கட்சி மேலிடத்துக்கு நல்ல நெருக்கம் இருக்கு. கூட்டணி பத்தியெல்லாம் அவர்கள் முடிவெடுத்துக் கொள்வார்கள்" என்று சொல்லியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications