"உங்க ஓட்டை யாரும் போடலை".. மாநில தேர்தல் ஆணையம் பரபர விளக்கம்.. வாக்கை செலுத்திய பாஜக எல் முருகன்!
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணையமைச்சருமான எல் முருகன் சென்னை அண்ணாநகரில் தனது வாக்கை செலுத்தினார். தனது வாக்கை யாரோ செலுத்திவிட்டார்கள் என புகார் கூறிய நிலையில் அவரது வாக்கை யாரும் செலுத்தவில்லை என மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இன்றைய தினம் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் மாலை 4.30 மணிக்கு வாக்களிக்கச் செல்வதாக இருந்தார். ஆனால் அதற்கு முன்னரே வேறு ஒருவர் அமைச்சர் முருகனின் வாக்கை கள்ள வாக்காக செலுத்திவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தில் புகார்
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. எம்.முருகன், எல்.முருகன் என்ற பெயர் குழப்பத்தால் தவறு நடந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்த நிலையில் இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் கூறுகையில் மத்திய இணையமைச்சர் எல் முருகனின் வாக்கை யாரும் செலுத்தவில்லை. சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் மத்திய அமைச்சரின் பெயருடன் சேர்த்து இரு முருகனின் பெயர்கள் உள்ளனர். அதில் ஒரு முருகன் வாக்களித்துவிட்டார்.

நெல்லையிலும் பிரச்சினை
எனவே மத்திய அமைச்சர் எல் முருகன் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதையடுத்து சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்த எல் முருகன் தனது வாக்கை செலுத்தினார். இதே போல் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட டவுன் 26-வது வார்டில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று பொதுமக்கள் வாக்களித்தனர். அங்கு 26-வது வார்டை சேர்ந்த நாகராஜன் என்பவர் இன்று காலை வாக்களிக்க வந்தார்.அப்போது தேர்தல் அலுவலர்கள் ஏற்கனவே நீங்கள் வாக்களித்து விட்டீர்கள் என்று கூறினாராம்.

14 ஐ பூர்த்தி செய்த வாக்காளர்
இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவரது வாக்கை மர்ம நபர்கள் கள்ள ஓட்டு போட்டு சென்றது தெரியவந்தது. இதனால் இந்து முன்னணி மாநில தலைவர் குற்றால நாதன் உதவியுடன் தன்னை வாக்களிக்க அனுமதிக்குமாறு தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டார். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணைய படிவம் 14-ஐ பூர்த்தி செய்து நாகராஜன் ஓட்டுப் பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications