பிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு
அறந்தாங்கி: பிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு இருப்பதுபோல் தெரிவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 73வது சுத்ந்திர தினம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாப்பட்டது. அன்று காலை செங்கோட்டையில் கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

அவர் தனது உரையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய குடும்பம் அமைந்து கொள்வது சிறந்த தேசபக்தி. செல்வங்களை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும். அப்போது தான் செல்வங்களை மக்களுக்கு பகிர்ந்து அளிக்க முடியும். வரும் காந்தி ஜெயந்தி முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட உள்ளது என்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த மூன்று அறிவிப்புகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சிறிய குடும்பம் அமைத்தல், செல்வங்கள் உருவாக்குபவர்களை மதித்தல், பிளாஸ்டிக்குக்கு தடை உள்ளிட்ட மூன்று அறிவிப்புகளை மனதார வரவேற்பதாக கூறினார்.
இந்த மூன்று அறிவுரைகளில், நிதியமைச்சரும், அவருடைய துறை சார்ந்த வருவமான வரி அதிகாரிகளும். பிரதமரின் துறையின் கீழ் உள்ள விசாரணை அதிகாரிகளும் இரண்டாவது அறிவுரை ( செல்வங்கள் உருவாக்குபவர்களை மதித்தல்) தெளிவாகவும் சத்தமாகவும் கேட்பார்கள் என்று நம்புகிறேன் என்று சிதம்பரம் கூறினார். மேலும் முதல் அறிவுரை (மக்கள் தொகை கட்டுப்படுத்துதல்) மற்றும் மூன்றாவது அறிவுரை ( பிளாஸ்டிக் தடை) மக்கள் இயக்கங்களாக மாற வேண்டும். உள்ளூர் அளவில் ஏராளமான தன்னார்வளர்கள் இயக்கமாக இந்த விஷயத்தை மேற்கொள்ள தயாராக உள்ளனர் என்றும் சிதம்பரம் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு இருப்பதுபோல் தெரிகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கூறியுள்ளார். அது என்ன நிர்பந்தம் என்பது மோடிக்கும், சிதம்பரத்திற்கும் மட்டுமே தெரியும் என்றும் முத்தரசன் அப்போது தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications