Vellore Ibrahim: 15 கிராம் கஞ்சா வைத்திருந்த.. பாஜக பிரமுகர் வேலூர் இப்ராஹிம் மகன் கைது! சென்னை போலீஸ் அதிரடி
சென்னை: பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமின் மகன் அப்துல் ரகுமான் 15 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக சென்னை திருமங்கலம் போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காரையும் கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை திருமங்கலம் அருகே வேலூர் இப்ராஹிமின் மகன் அப்துல் ரகுமான் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அந்த காரை ரஷித் என்பவர் ஓட்டிச் சென்றாராம். அந்த காரில் கஞ்சா இருப்பதாக திருமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸார் அப்துல் ரகுமானின் காரை சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 15 கிராம் கஞ்சா இருந்ததை பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்துலிடம் கேட்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதையடுத்து போலீஸார் அந்த கஞ்சாவையும், காரையும் பறிமுதல் செய்து அப்துல் ரகுமானையும் ரஷித்தையும் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்துலின் தந்தை வேலூர் சையது இப்ராஹிம், பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கஞ்சா போதை பழக்கம் அதிகரித்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக இருப்பதாக அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் பாஜக நிர்வாகியின் மகன் மீது கஞ்சா குற்றச்சாட்டு வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications