குட் நியூஸ்.. பேஸ்புக், இன்ஸ்டா மாதிரி மாறப்போகிறது வாட்ஸ்அப்.. வருகிறது புது அப்டேட்!
சென்னை: வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்று லாக்இன் அப்ரூவல் வழிமுறையை மெட்டா கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலிகளுக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது. கோடிக்கணக்கில் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த செயலியின் பாதுகாப்பு அம்சங்களை மெட்டா நிறுவனம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
குழுவின் அட்மின்கள் நினைத்தால் எந்த செய்தியை வேண்டுமானாலும் அழித்துவிடலாம் எனும் புதிய வசதியை வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்த முயன்று வருகிறது.

உலக அளவில்
கடந்த ஜூன் மாத கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் சுமார் 2.26 பில்லியன் பயன்பாட்டாளர்களை வாட்ஸ்அப் கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இதன் எண்ணிக்கை 390.1 மில்லியன். அதாவது 39 கோடி பயன்பாட்டாளர்கள். இந்நிலையில் இந்த செயலியில் அவ்வப்போது சில மாற்றங்களை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில், மடிக்கணினி அல்லது கணினியுடன் வாட்ஸ்அப் செயலியை இணைப்பதன் மூலம் இணைய வசதி இல்லாமலேயே இந்த செயலியை பயன்படுத்தும் புதிய வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியது.

பீட்டா
தற்போது இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்அப் பலப்படுத்தி வருகிறது. இதன்படி உள்நுழைய லாகின் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெறுமென வீடியோ கால், குறுஞ்செய்தி போன்றவற்றை கடந்து தற்போது பண பரிமாற்ற வசதியையும் வாட்ஸ்அப் மேற்கொண்டு வருவதால் இந்த பாதுகாப்பு அம்சங்களுக்கு அதீத முக்கியத்துவத்தை கொடுக்க மெட்டா முயன்று வருகிறது. பொதுவாக இம்மாதிரியான சோதனை செயல்பாடுகள் 'பீட்டா' வெர்ஷன்களை பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ்அப் முன்கூட்டியே அளித்து சோதனை செய்து பார்க்கும். ஆனால் தற்போது இந்த புதிய பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக தயாராகவில்லை என்பதால் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவில்லை.

புதிய அம்சம்
இந்த புதிய அம்சம் உங்கள் கணக்கை வேறு யாராவது ஹேக் செய்ய முயற்சித்தால் உடனே குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது. இந்த குறுஞ்செய்தியில் எத்தனை மணிக்கு இந்த ஹேக்கிங் முயற்சி நடந்துள்ளது, அது கம்ப்யூட்டர் மூலமாகவா அல்லது செல்போன் மூலமாகவா என முக்கிய தகவல்களையும் இடம்பெற்றிருக்கும். இந்த வசதியின் மூலம் உங்கள் அக்கவுன்ட் இரண்டு சரிபார்ப்புக் குறியீடு அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது உங்களுடைய மொபைல் எண் மற்றும் இமெயில் என இப்படி ஏதாவது இரண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும். அதேபோல இந்த வசதி எப்போது மக்கள் பயன்பாட்டு வரும் என தெரியாது. இது குறித்த சரியான விவரங்களை WABetaInfo வெளியிடவில்லை.

விதிமீறல்
ஆனால் இவ்வாறு எவ்வளவுதான் பாதுகாப்பு வசதிகளை அறிமுகப்படுத்தினாலும், விதி மீறல்களை முற்றிலுமாக களை எடுக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன்னர் 22 லட்சத்து 10 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விதிமீறல்கள் தொடர்பாக நிறுவனத்துக்கு வந்த புகார்களின் அடிப்படையிலும், விதிமீறல்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்தில் 19 லட்சம் கணக்குகளையும், ஏப்ரல் மாதம் 16 லட்சம் கணக்குகளையும், மார்ச் மாதம் 18.05 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications