நிஜ சிவாஜியான ரஜினி.. அதிக வருமான வரி செலுத்தியதற்கான விருது! மகள் சௌந்தர்யாவிடம் வழங்கிய தமிழிசை
சென்னை: வருமான வரி தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை விருது வழங்கி இருக்கிறது.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது முதல் நிதியமைச்சராக பதவி வகித்தவர் சர் ஜேம்ஸ் வில்சன்.
இவர் கடந்த 157 ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த 1860 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நாட்டின் முதல் நிதி அமைச்சராக பதவியேற்று வருமான வரியை இந்தியாவில் அறிமுகம் செய்தார்.
வருமான வரி
அப்போது செல்வந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு அவர் வரி விதித்தது பலரது கோபத்தை ஏற்படுத்தியது. முதன்முதலில் வருமான வரி அறிமுகம் செய்யப்பட்டப்போது அரசுக்கு ரூ.30 லட்சம் வருமானம் கிடைத்தது. தற்போது இந்தியாவில் கிடைக்கும் வருமான வரி ரூ.10 லட்சம் கோடியாக வளர்ந்து நிற்கிறது. மன்னர்கள் ஆட்சி காலத்திலேயே வரி விதிப்பு இருந்தாலும் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய வருமான வரி முறையே தற்போது சட்டத் திருத்தங்களுடன் பின்பற்றப்பட்டு வருகிறது.
வருமான வரி விழா
வருமான வரி அறிமுகம் செய்யப்பட்ட ஜூலை 24 ஆம் தேதி ஆண்டுதோறும் வருமான வரி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் வருமான வரித்துறை சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு அதிக வரி செலுத்தியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, வருமான வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
சென்னையில் வருமான வரி விழா
இந்த நிலையில் நேற்று சென்னை டிடிகே சாலையில் உள்ள இசை அகாடமியில் வருமான வரி விழா நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தலைமையில் நடந்த இந்த விழாவில், தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்திற்கு விருது
இந்த விழாவில் அதிக வருமான வரி செலுத்தியவர்கள் வருமான வரித்துறையால் கவுரவிக்கப்பட்டனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டிலேயே அதிகளவில் வருமான வரித்துறை செலுத்தியதற்காக விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்தின் சார்பாக அவரது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் விருது வழங்கி கவுரவித்தார்.