முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம்! ஏப்ரல் 28ம் தேதி பிளான்.. ஆளுநர் ரவி, எடப்பாடியும் போறாங்களே
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி வரை டெல்லியில் தங்கி இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அன்றைய தினமே சென்னைக்கு திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக சில முறை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். கடைசியாக அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜி 20 மாநாடு தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அவர் டெல்லி சென்றார்.

அப்போது பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசிய அவர், அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு அன்றைய தினமே அவர் சென்னை திரும்பினார். அதை தொடர்ந்து டிசம்பர் மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கான நேரில் துக்கம் விசாரிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார். டிசம்பர் மாத பயணங்களுக்கு முன்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்த முக ஸ்டாலின், மாலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு தொடங்கி 4 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் ஒருமுறை கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு வந்தார். அதே நேரம் அண்மையில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி ஸ்டாலினுடன் சேர்ந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 28 ஆம் தேதி டெல்லிக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 29 ஆம் தேதி அவர் தமிழ்நாடு திரும்பிவிடுவார் என்றும் கூறப்படுகின்றன. டெல்லி பயணத்தின்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க நேரம் கேட்டு இருந்ததாக கூறப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
அதே நேரம் ஏப்ரல் 26 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் டெல்லிக்கு செல்ல இருக்கிறார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அவரது அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்த நாட்களில் டெல்லி செல்ல உள்ளதாக வெளியான தகவல் அரசியல் முக்கியத்துவம் பெற்று உள்ளது.












Click it and Unblock the Notifications