தாம்பரத்திற்கு பஸ் வராது! கிளாம்பாக்கம் வரைதான்.. தென் மாவட்ட பயணிகளுக்கு மீண்டும் ஷாக் தந்த எம்டிசி
சென்னை: தென் மாவட்ட பஸ்கள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயங்கும் என்றும் தாம்பரம் வரை இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினம் தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகம் வாயிலாக பேருந்துகள் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் அதிக அளவில் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையில் மட்டுமே பெரும்பாலும் இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
இருந்தாலும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து கிளம்பி திண்டிவனம், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தாம்பரம் வரையில் இயக்கப்படுகின்றன. அதேபோல தாம்பரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன. நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் தாம்பரம் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு நடைபெறும் விசேஷங்கள், முக்கிய நிகழ்வுகளுக்கு சென்று வருகிறார்கள். இதனால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை காண முடியும். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தாம்பரம் வரை இயக்கப்படாது
தனியார் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு, ஆவடி போன்ற பகுதிகளில் தங்கள் பணிமனைகள் வைத்து இருக்கும் இடம் வரை இயக்கப்படுகிறது. இதனால் தாம்பரம் வரையில் இயக்கப்படும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் பயணிகள் நகருக்குள் வருவதற்கு எளிதாக இருந்தது. தாம்பரத்தில் இருந்து நகரின் பிற பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்பதால் பயணிகள் அதிக அளவில் இத்தகைய பேருந்துகளை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தான் இனி தாம்பரம் வரை அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படாது எனவும் கிளாம்பாக்கம் வரையில் மட்டுமே இயக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எம்.டி.சி கூறியிருப்பதாவது:- தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறை பரிந்துரை வழங்கியுள்ளது.
4 ஆம் தேதி முதல்
அதன்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் 04.03.2025 செவ்வாய்கிழமை முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் வரையில் மட்டுமே தென் மாவட்ட பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால், ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக கூடுதலாக 104 பேருந்துகள், 816 பயண நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications