கோவை- சென்னையை விட, சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலில் கட்டணம் ஏன் அதிகம்.. ரயில்வே விளக்கம்
சென்னை: சென்னை- கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில், சென்னை டூ கோவை வழியில் கட்டணம் குறைவாகவும், கோவை டூ சென்னை கட்டணம் அதிகமாக உள்ளது. இந்த கட்டண வேறுபாடு ஏன் என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 8-ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 5.50 மணி நேரத்தில் கோவையில் இருந்து சென்னைக்கு உலகத்தரமான வசதிகளுடன் பயணிக்க முடியும் என்பதால் விமானத்தை செல்லும் பலர் ரயிலில் செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதேபோல் காலையில் கோவை இருந்து வந்தவர்கள் மதியம் முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு பிற்பகலில் கோவையில் இருந்து கிளம்பினால், இரவிற்குள் வீட்டிற்கு போய்விடுவார்கள். கோவையில் இருந்து காலையில் செல்லும் ரயிலில் தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதேபோல் சென்னையில் இருந்து பிற்பகல் செல்லும் ரயிலில் தேனீர், ஸ்னாக்ஸ் மற்றும் இரவு உணவு தரப்படுகிறது.
முற்றிலும் குளிர்சாதன வசதி உள்ள இந்த ரயிலில் ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு ஏசி எக்ஸிகியூட்டிவ் பெட்டியும் என 8 பெட்டிகள் இருக்கின்றன. இந்த வந்தே பாரத் ரயிலில் கோவை டூ சென்னை, சென்னை டூ கோவை இடையே கட்டண வேறுபாடு உள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
அதாவது, சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் சேர் கார் வகுப்பு கட்டணம் ரூ.2,485-ம், ஏசி சேர் கார் வகுப்பு கட்டணமாக ரூ.1,365-ம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், மறுமார்க்கமாக கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரும்போது, எக்ஸிகியூட்டிவ் சேர் கார் வகுப்பு கட்டணமாக ரூ.2,310 ஆகவும், ஏசி சேர் கார் வகுப்பு கட்டணம் 1,215 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் கூறும் போது, சென்னை - கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் அடிப்படைக் கட்டணம் ரூ.1,900, உணவு கட்டணம் ரூ.349, முன்பதிவு கட்டணம் ரூ.60, அதிவிரைவு கட்டணம் ரூ.75, ஜிஎஸ்டி ரூ.101 என மொத்தம் 2,485 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஏசி சேர் கார் வகுப்பில் அடிப்படைக் கட்டணம் ரூ.941, உணவு கட்டணம் ரூ.288, முன்பதிவு கட்டணம் ரூ.40, அதிவிரைவு கட்டணம் ரூ.45, ஜிஎஸ்டி ரூ.51 என ரூ.1,365 வசூலிக்கப்படுகிறது.
கட்டண வேறுபாடுக்கு உணவுக் கட்டணம் காரணமா?: கோவையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயிலில் செய்தித்தாள், தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அதேநேரம், சென்னையில் இருந்து பகல் 2.25 மணிக்குப் புறப்படும் ரயிலில் மாலையில் செய்தித்தாள், தேநீர், ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவும் வழங்கப்படுகிறது. அதனால் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் ரூ.175-ம், ஏசி சேர் காரில் ரூ.150-ம் அதிகமாக உள்ளது.
எனவே, வந்தே பாரத் ரயிலில் இரு மார்க்கத்திலும் உணவுக் கட்டணம் அதிகரிப்பைத் தவிர மற்ற கட்டணங்களில் வித்தியாசமில்லை என ரயில்வே உயரதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications