ரயில் பயணிகளுக்கு செம நியூஸ்.. சென்னை - நெல்லை உட்பட 6 சிறப்பு ரயில்கள் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு!
சென்னை: திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 22 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. இதேபோல, மொத்தம் 6 சிறப்பு ரயில்களை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலி செல்லும். மறு மார்க்கத்தில் வியாழக்கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் வரும்.

சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் இந்த சிறப்பு ரயிலில் இரண்டடுக்கு ஏசி ஒரு பெட்டியும், மூன்றடுக்கு ஏசி 6 பெட்டியும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி 7, முன்பதிவு செய்யப்படாத பெட்டி 4 இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணிக்கு வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். வேளாங்கண்ணி - எழும்பூருக்கு வாரந்தோறும் சனி, திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 24 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 9 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலில் 14 ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதாகவும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - ராமநாதபுரத்துக்கு வாரந்தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ராமநாதபுரம் - தாம்பரத்துக்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிறுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 30 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், மூன்றடுக்கு ஏசி 3, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி 6, முன்பதிவு செய்யப்படாத பெட்டி 7 இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி இருப்பதாகவும் தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications