'சென்னை ஒன்று' ஆப்பில் இந்த ஒரு டிக்கெட் மட்டும் புக்கிங் பண்ண முடியாது..ரயில்வே விளக்கம்
சென்னை: சென்னை ஒன்று செயலியில், புறநகர் மின்சார ரயிலில் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என்றும் ஏற்கனவே உள்ள யூ.டி.எஸ்., செயலி இருப்பது போல், இந்த செயலியையும் பயணியர் பயன்படுத்தலாம் என்றும் புறநகர் ரயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.. அதேநேரம் 'ஏ.சி.' மின்சார ரயில் டிக்கெட் எடுக்க முடியாது என்றும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' (CHENNAI ONE) மொபைல் செயலியை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டு நாள் முன்பு தொடங்கி வைத்தார்.

இந்த சென்னை ஒன்று செயலி மூலம், இருந்த இடத்தில் இருந்தே பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், கேப் (Cab) மற்றும் ஆட்டோக்களை ஒரே க்யூஆர் பயணச்சீட்டு எடுக்கலாம். மேலும் சென்னை ஒன்று செயலி மூலம் பொதுமக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்கள் தற்போது எங்கு வருகின்றன.. எவ்வளவு நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வரும் என்பதை அறியலாம். அதேபோல் யுபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச்சீட்டுகளை பெற முடியும். மேலும் ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சென்னை ஒன்று செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த சென்னை ஒன்று செயலிக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் இதில் நிகழ்நேர பேருந்து வழித்தடங்களை பார்க்க முடியும் என்பதால், எந்த வழித்தடங்களில் பேருந்துகள் குறைவாக உள்ளது என்பதை அறியும் மக்கள், அங்கு அதிக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். மேலும் கார், ஆட்டோ புக்கிங் வசதியும் உள்ளதால், பலரும் வரவேற்கிறார்கள். அதேநேரம் இதில் மின்சார ரயில்களில் பயணிக்க டிக்கெட் எடுக்க முடியும் என்றாலும், ஏசி மின்சார ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்க முடியாது.
இதுபற்றி தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னையில் பஸ், மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில் மற்றும் வாடகை ஆட்டோ, கார் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரே கியூ-ஆர் பயணச்சீட்டு மூலம் பயணம் செய்ய சென்னை ஒன்று என்ற புதிய செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த சென்னை ஒன்று செயலியில், புறநகர் மின்சார ரயிலில் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். ஏற்கனவே உள்ள யூ.டி.எஸ்., செயலி இருப்பது போல், இந்த செயலியையும் பயணியர் பயன்படுத்தலாம். புறநகர் ரயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 'ஏ.சி.' மின்சார ரயில் டிக்கெட் எடுக்க முடியாது. டிக்கெட் பரிசோதனையின்போது, பயணியர் 'அசல் ரயில் டிக்கெட்டைக் காட்டு' பக்கத்தின் வாயிலாக, டிக்கெட்டுகளைக் காண்பிக்க வேண்டும். டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது. இந்த டிக்கெட்டுகள் எடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications