இந்தா வந்துருச்சில்ல.. மொத்தம் 3 நாட்கள்.. இந்த 10 மாவட்டங்களில் பொளந்து கட்ட போகும் மழை..!
இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என தகவல்
சென்னை: தமிழகத்தில், 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அந்தந்த மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இத்தனை நாளும் வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் ஒருவழியாக ஓய்வு பெற்றுவிட்டது.. ஆனாலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தமிழகத்தில் இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அதற்குள் கேரளாவில் தென் மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்னதாகவே தொடங்கிவிட்டது..
இந்தியாவில் அதிக மழைப் பொழிவை தருவது தென்மேற்கு பருவமழையாகும்..

தென்மேற்கு பருவமழை
பொதுவாக, ஜுன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்... ஆனால், இந்த முறை தென்மேற்கு பருவமழையானது 3 நாட்களுக்கு முன்பே, அதாவது மே 29-ம் தேதியே தொடங்கிவிட்டது.. தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழகத்திற்கு இயல்பான மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. 3 நாட்களுக்கு முன்னாகவே, தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், நடப்பாண்டில் மழைப்பொழிவு என்பது இயல்பான அளவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை
அதன்படி, நீண்ட கால சராசரி மழையளவில் 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழையின் மூலம் 39.34 செ.மீ. மழை கிடைத்திருந்த நிலையில், நடப்பாண்டிலும் இயல்பான மழையே பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது... அதன்படி, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் என்றும், 30, 31, 1, 2, ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது.

வெப்பநிலை
அதன்படி, நேற்றைய தினம் நீலகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.. எனினும் மறறொரு புறம் வெயிலும் கொளுத்தியது.. அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. சென்னை, கடலுார், தஞ்சாவூர், திருத்தணி, வேலுார், 39, திருச்சி, காரைக்கால், புதுச்சேரி, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது... அதேபோல, மழையை பொறுத்தவரை நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது.

10 மாவட்டங்கள்
இந்நிலையில், இன்றும் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும் என்றும், சென்னையில், 40 டிகிரி செல்ஷியஸ் வரையில் வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications