தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீச... கோவை, நீலகிரி,தென்காசியில் மழை அடி தூள் கிளப்பும்
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதால் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கழியல் பகுதியில் 11 செமீ மழையும் குழித்துறையில் 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது. கோவை சின்னக்கல்லாரில் 9 செமீ மழையும் வால்பாறை, வேலூரில் 8 செமீ மழையும் பேச்சிப்பாறை நாகர்கோவிலில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மண் சரிவு ஏற்படும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி,தென்காசியில் கனமழை
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

லேசான மழை
திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

10 மாவட்டங்களில் மழை
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

கொஞ்ச நஞ்ச மழையில்லை
ஜூலை 12ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர், தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென்காசி, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மலையில் மண் சரிவு
ஜூலை 10 முதல் 12ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாலும், மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்பதனாலும் பொதுமக்கள் மலை ஏற்றத்தை தவிர்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13, 14 ல் எங்கு மழை
ஜூலை 13, 14ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

35 டிகிரி செல்சியஸ்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை முதல் ஜூலை 13ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இரண்டு நாட்களுக்கு கவனம்
ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று முதல் ஜூலை 13ஆம் தேதி வரை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பலத்த காற்று வீசும்
ஜூலை 10 முதல் 12ஆம் தேதி வரை மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 10 முதல் 14ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று
ஜூலை 10 முதல் 14ஆம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications