முகுந்தன் அவுட்! சவுமியா இன்? பாமக இளைஞரணி தலைவராகிறாரா அன்புமணி மனைவி?
சென்னை: இளைஞரணித் தலைவராக இருந்த முகுந்தன் அந்த பதவியிலிருந்து விலகிய நிலையில் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி அந்த பதவியில் நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
சவுமியா அன்புமணி, பசுமைத் தாயகம் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மரங்களை வளர்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இவரும் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்தான். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தினர். இவருடைய அப்பா கிருஷ்ணசாமி முன்னாள் எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். அது போல் சவுமியாவின் அண்ணன் விஷ்ணுபிரசாத்தும் தற்போது கடலூர் எம்.பி.யாக உள்ளார்.
சகோதரன்
இந்த நிலையில் தந்தை, சகோதரனை போல் சவுமியாவின் மாமனார் வீட்டுக் குடும்பமும் அரசியல் குடும்பம்தான். மாமனார் ராமதாஸ், கணவர் அன்புமணி. கணவர் மத்திய அமைச்சர், எம்பி உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். இந்த நிலையில் தற்போது சவுமியாவும் அரசியலுக்கு வந்துள்ளார்.
தருமபுரி
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அப்போது முதல் அவர் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்திற்கு செல்வது, அந்த தொகுதியில் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் சவுமியா அந்த தொகுதியில் ஐக்கியமாகிவிட்டார் என்றே சொல்லலாம்.
பாப்பிரெட்டிப்பட்டி சவுமியா
வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் சவுமியா பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. பாமக தலைவராக அன்புமணி ஆனதும், அவர் வகித்து வந்த இளைஞரணி தலைவர் பதவி காலியாக இருந்தது.
சவுமியா அன்புமணி
இந்த பதவியில் சவுமியா அன்புமணியை நியமிக்கலாம் என அன்புமணி நினைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பாமக நிறுவனரிடம் அன்புமணி சொல்லியிருக்கலாம் என தெரிகிறது. அந்த சமயத்தில்தான் பாமக பொதுக் குழு கூட்டப்பட்டு இளைஞரணி தலைவர் பதவியை தனது மகள் வழி பேரன் முகுந்தனுக்கு கொடுத்தார்.
கடும் எதிர்ப்பு
இதை சற்று எதிர்பாராத அன்புமணி, பொதுக் குழு மேடையிலேயே கடுமையாக எதிர்த்தார். பதிலுக்கு ராமதாஸ் காட்டமாக பேசியிருந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தருமபுரி கூட்டத்தில் பேசிய அன்புமணி, "அப்படி நான் என்ன தவறு செய்தேன், ஒரு மாதமாக மன உளைச்சலில் இருக்கிறேன். எனக்கு தூக்கமே வரவில்லை என குமுறினார்.
ஜி.கே. மணி
ராமதாஸையும் அன்புமணியையும் சேர்த்து வைக்க ஜி.கே.மணி, திலகபாமா, பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சமாதானம் பேசி வருகிறார்களாம். ஆனால் இருவருக்கும் இடையே இடைவெளியானது நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
35 வயதில்
இந்த நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதுதான் நான் செய்த மாபெரும் தவறு. தாயை எப்போது அடித்தாரோ அப்போதே நான் செத்துவிட்டேன் என நா தழுதழுக்க ராமதாஸ் பேசியிருந்தார்.
ராமதாஸ் முடிவு?
இதனிடையே இளைஞரணி தலைவர் பதவியில் இருந்த முகுந்தன் தற்போது விலகிவிட்டார். இதனால் அந்த பதவி சவுமியாவுக்கு அளிக்கலாம் என தெரிகிறது. ராமதாஸ் 5 முறை ஆலோசனை கூட்டங்களை நடத்தியும் அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. எனவே கட்சியின் வருங்காலம் கருதி அவருடன் இணக்கமாக செல்வது என ராமதாஸ் முடிவு செய்து, சவுமியாவை இளைஞரணி தலைவராக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
என்ன நடக்கும்?
ஆனால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் குறித்து மிகவும் அதிர வைக்கும் தகவல்களை ராமதாஸ் பேசியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications