எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்பான ரூ.110 கோடி சொத்து திடீர் முடக்கம்.. அதிரடி நடவடிக்கை.. என்ன நடந்தது?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான வழக்கில் ரூ.110 கோடி நிரந்தர வைப்புதொகையை முடக்க லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உட்பட 60 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர்களில் முறைகேடு செய்ததாக எஸ்.பி வேலுமணி மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம், மாநகராட்சி ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தவும், ஆவணங்களை கைப்பற்றவும் இந்த ரெய்டு நடந்ததாக கூறப்பட்டது.

வழக்கு
ரெய்டின் போது வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து மாநகராட்சி ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்கள், டெண்டர் விடப்பட்டதற்கான ஆவணங்கள். லேப்டாப்கள், பல்வேறு ஹார்ட் டிஸ்க்குகள், 2 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெய்டுக்கு பின் எஸ்பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

வழக்கு
எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான கே. சந்திர பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர்களின் கேசிபி நிறுவனம் மீதும் வழக்கு பதியப்பட்டது. அதேபோல் ஆலம் கோல்டு அண்ட் டயமண்ட் நிறுவனம் மீதும் இதில் வழக்கு பதியப்பட்டது. இது வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனமாக பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான 110 கோடி ரூபாய் நிரந்தர வைப்புதொகை தற்போது முடக்கப்பட்டுள்ளது.

கேசிபி நிறுவனம்
எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்த வாதத்தில், எஸ்.பி வேலுமணி, கேசிபி நிறுவனம், ஆலம் கோல்டு அண்ட் டயமண்ட் நிறுவனம் டெண்டர் ஒப்பந்தங்களுக்காக லஞ்சம் வாங்கி உள்ளனர். இதில் 2017க்கு பின் கேசிபி நிறுவனம் மற்றும் ஆலம் கோல்டு அண்ட் டயமண்ட் நிறுவனம் 110 கோடி ரூபாய் நிரந்தர வைப்புதொகை முதலீட்டை செய்துள்ளது. சரியாக டெண்டர் நடக்கும் சமயத்தில் இந்த பணம் அவர்களுக்கு வந்துள்ளது.

லஞ்சம்
இது டெண்டர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்ச பணம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே இந்த முதலீட்டை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று எஸ்.பி. வேலுமணி தொடர்பான வழக்கில் ரூ.110 கோடி நிரந்தர வைப்புதொகையை முடக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதில் நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கும்படி கேசிபி நிறுவனம் மற்றும் ஆலம் கோல்டு அண்ட் டயமண்ட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications