9 பேர்.. தலா ரூ. 25 லட்சம்! “இது தாய் வீட்டுச் சீதனம்” … ஸ்டாலினை பார்த்து வியக்கும் விஞ்ஞானிகள்!
சென்னை: தமிழ்நாடு இதுவரை பார்க்காத அதிசயம் இது. இந்திய விண்வெளி மையத்தில் பணியாற்றி சாதனை புரிந்த விஞ்ஞானிகளை அழைத்து "ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்" எனத் தனி மேடை போட்டுப் பாராட்டு விழா நடத்தி உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விழாவில் ஸ்டாலின் பேசும்போது, "இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். தமிழ்நாட்டு முதலமைச்சராக மட்டுமல்ல; தமிழனாகப் பிறந்த பெருமையை இன்றைக்கு நான் அதிகமாக அடைந்துகொண்டிருக்கிறேன்" என்றார்.

அப்போது அரங்கமே அதிர்ந்தது. அங்கே அமர்ந்திருந்த மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். காரணம், மொத்தம் 9 விஞ்ஞானிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் அளித்தார் முதல்வர். இதில் கூடுதல் சிறப்புச் செய்தி என்னவென்றால் அந்த 9 பேரில் 6 பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்.
முதல்வரின் அடுத்த அறிவிப்பு அடிதூள் ரகம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசின் உதவிப் பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பதைத் தொடர 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள்என்ற பெயரில் ஊக்கத்தொகை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அரசுப் பள்ளியிலிருந்து வருங்காலத்தில் பல விஞ்ஞானிகள் உருவாக உள்ளனர்.
இன்றைக்கு அரசு மூலம் கிடைக்கும் பல சலுகைகளால் வரும் தலைமுறை பயனடைய உள்ளது. ஆனால், அன்று எந்த வசதியும் கிடைக்காமல் தங்களின் சொந்த முயற்சியால் வென்றுகாட்டியுள்ள கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீ.நாராயணன், ஏ.இராஜராஜன், எம்.சங்கரன், ஜெ.ஆசீர் பாக்கியராஜ், மு.வனிதா, ப.வீரமுத்துவேல் ஆகிய 9 பேர் என்ன சொல்கிறார்கள்?

விருது பெற்ற சந்திரயான் 2 திட்ட இயக்குநர் வனிதா முத்தையாவிடம் பேசினோம். "எங்கள் துறையைப் பொறுத்தவரை யார் கடுமையாக வேலை செய்கிறார்கள்? அதில் தகுதி வாய்ந்தவர் யார்? எனப் பார்ப்பார்கள்.
அவரை திட்ட இயக்குநராக நியமிப்பார்கள். அப்படிப் பார்த்தால், சந்திரயான் திட்டப்பணிகள் நடந்தபோது மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். அவரை அடுத்த நிலையில் நான் இருந்தேன். ஆகவே, திட்ட இயக்குநராக நான் பதவி உயர்த்தப்பட்டேன்.

இந்தக் கேள்விக்கு என்னால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. தமிழர்கள் என்பதால் இந்தப் பதவிக்கு வந்தோமா? அல்லது சரியான நேரத்தில் சரியான பொறுப்பில் நாங்கள் இருந்தோமா? என்று. என்னைப் பொறுத்தவரை எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு, கடுமையாகப் பணியாற்றினோம். அப்படித்தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால், வட இந்தியர்கள் பலரும் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட இந்தத் திட்டத்தில் மட்டும் பணி செய்தவர்கள் அதிகமான தமிழர்களாக அமைந்துவிட்டார்கள். அதுவே யதார்த்தமான உண்மை" என்கிறார்

"நானும் இந்தக் கேள்வி பற்றிய சில விளக்கங்களைச் சொல்லலாம் என்று விரும்புகிறேன்" என்றபடி பேசத் தொடங்குகிறார் ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி. இவர் சூரியனைப் பற்றிய ஆய்வுகளில் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்.
"இஸ்ரோவில் நிறைய புராஜெக்ட்ஸ் நடந்துவருகின்றன. ஆனால், அவை பற்றிய அதிகமான செய்திகள் வெளியாவதில்லை. குறிப்பாக நாங்கள் பணியாற்றிய திட்டங்கள் பற்றி அதிகமான செய்தி வெளியே தெரிந்துள்ளது. ஆகவே, பலரும் எங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

சொல்லப் போனால் வனிதாவுக்கு முன்னால் டி.கே.அனுராதா இந்தப் பொறுப்பிலிருந்தார். அவர்தான் முதல் பெண் இயக்குநர். அவர் கன்னடத்துக்காரர். அதைப்போல வடநாட்டுக்காரர்கள் பலர் இருந்துள்ளனர். இஸ்ரோவைப் பொறுத்தளவில் தமிழர், கன்னடர் எனத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கமாட்டார்கள்.
இயக்குநராக அடுத்த பதவிக்கு யார் என முடிவு செய்யும்போது, அதற்கான தகுதி உள்ளவர் இயக்குநராகப் பதவியில் அமர்த்தப்படுவார். அதைக் கொண்டு அவர் தனது திறமையை நிரூபிக்கவேண்டும் என்றார்.

அவரிடம் நாங்களும் அப்படிப் பிரித்துப் பார்க்கவில்லை. பலரும் இதே துறையில் சாதித்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்காரர்கள் என்ற மனநிலையில் நாங்கள் ஒரு பெருமிதத்துடன் அதைப் பிரித்துச் சொல்கிறோம். மற்றபடிப் பிரிவினை மனநிலையில் பேசவில்லை என்று நாமும் விளக்கினோம்.
விஞ்ஞானி நிகர் ஷாஜி, தென்காசியில் பிறந்தவர். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை அரசுப் பள்ளியில் பயின்றவர். இவர் ஒரு தமிழ் மாணவி. 10 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மாணவி. 12 ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மாணவி. இன்னும் அழுத்திச் சொன்னால், இவரது ஊரிலேயே பொறியியல் படித்த முதல் பெண் இவர்தான்.

விஞ்ஞானி சிவன், "எங்களுக்கு அரசு எடுத்த இந்த விழா மிக மிக முக்கியமானது. ஏனென்றால், அரசுப் பள்ளியில் படித்து விஞ்ஞானியாக உயர்ந்தவர்கள் நாங்கள். அப்படிப் பார்க்கும்போது அரசுப் பள்ளியில் படிப்பவர்கள் மற்றவர்களைவிட, எந்தவகையிலும் குறைவானவர்கள் இல்லை என்பதை உணரவைத்திருக்கிறோம்.
இதை விழாவுக்கு வந்திருந்த அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் உட்கார்ந்து கேட்டனர். அவர்கள் மனதில் இந்தத் தகவல் மாபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும். அவர்கள் நம்மால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கையோடு படிப்பார்கள். அதுதான் இந்த விழாவின் முதல் வெற்றி" என்கிறார்.

இவர் தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி கிராமமான சரக்கல்விளையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து, ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் வரைப் படித்து இந்த அளவுக்கு முன்னேறினார்.
2018இல் விக்ரம் சாராபாய், எம்.ஜி.கே. மேனன், சதீஷ் தபான், யு.ஆர். ராவ் போன்ற மாபெரும் விஞ்ஞானிகள் வகித்த பதவியான இஸ்ரோ தலைவர் பதவியை ஏற்று அதற்கு மேலும் சிறப்பு சேர்த்தவர் இந்த சிவன்.

கடந்த 33 ஆண்டுகளில் இஸ்ரோவில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகளில் இவரது பங்களிப்பு பெரிய அளவிலிருந்துள்ளது என்பது தமிழர்களாகி நமக்கு எல்லாம் பெருமை.
சிவனைப் போன்று இயற்பியல் நாயகன் இஸ்ரோ விஞ்ஞானி சங்கரனும் ஒரு தமிழர். இவர் சந்திரனையும் சூரியனையும் சோதனை செய்தவர். 1971இல் பிறந்த இவர் சென்னை ஐஐடியில் இளங்கலை இயற்பியல் படித்தார். அதன்பின் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இஸ்ரோவின் சந்திரயான் 1 மற்றும் 2 எனப் பல திட்டத்திற்கான சோலார் பேனல்கள், தகவல் தொடர்பு அமைப்புகளை உருவாக்கியவர் இவர். தற்போது யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் தலைவராகத் தலைநிமிர்ந்து நடைபோட்டு வருகிறார் இந்தத் தமிழர்.
சோழர் காலத்தில் தமிழ் மண்ணை ஆண்டார் ராஜராஜன். நம் காலத்தில் விண்ணை ஆளும் நாயகனாக வலம் வருகிறார் இந்த இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன். இவரும் ஒரு தமிழர்.
இன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்கராக இருந்து உலகையே தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

இந்தியாவின் முதல் பிரைவேட் ராக்கெட் என்ற திட்டத்தில் இவருக்கு முதன்மையான இடம் உண்டு. லேப்பின் சேர்மனாக சந்திரயான் 3 வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் இவர்.
"இந்த அரசு பல விஷயங்களைச் சிறப்பாகச் செய்துவருகிறது. குறிப்பாகப் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் அதிக அளவில் மாற்றங்களை இந்த அரசு செய்துள்ளது. எங்களுக்காக நடத்திய இந்த விழாவில்கூட முதல்வர் ஸ்டாலின் பல விசயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அவர் பேச்சின் மூலம் அவர் எந்தளவு சின்னசின்ன விசயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் எனப் புரிந்துகொள்ள முடிகிறது.
எங்களைப் போன்ற விஞ்ஞானிகளை அழைத்து, ஊக்குவிப்பது சிறப்பான செயல். அதனால் இளம் தலைமுறை உத்வேகம் பெற்று அறிவியல் துறைக்குள் வருவார்கள். ஆகவே, மகிழ்ச்சியாக இருக்கிறதுஎன்கிறார் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்.

அன்று அரசுப் பள்ளியில் சராசரி மாணவராக இனம் காணப்பட்ட இவர், இன்று விண்வெளியில் சாதனையாளராக வலம் வருகிறார். வல்லரசு நாடுகளான ரஷ்யா 11 முறையும் அமெரிக்கா 3 முறையும் முயன்றும் முடியாததை முதல் முறையிலேயே முடித்துக் காட்டியவர் இந்த வீரமுத்துவேல்.
இவரைப் போலவே ஒரு சாதாரண விவசாயி மகனாகப் பிறந்து விண்வெளி நாயகன் மலர்ந்தவர் வி. நாராயணன். இவர் ஒரு பச்சை தமிழர். சந்திராயன் 3 இன் வெற்றிக்கு முகமாக இருந்தவர். இவரது முதல் பணி விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் அமைந்தது. அப்போது முதல் முழு மூச்சாக விண்வெளியை ஆராய்ந்து இந்திய மண்ணுக்கு வெற்றிக்கனியைப் பறித்துத் தந்துள்ளார் இவர்.
சிவனைப் போன்று அதிக அளவில் பேசப்பட்டவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. அவரும் அரசுப் பள்ளி பெற்றெடுத்த அறிவியல் முத்து. சந்திரயான் 1 திட்டத்தின் இயக்குநர். அவர் என்ன சொல்கிறார்?

"என்னைப் பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பரிசு என்பது பிறந்த வீட்டுச் சீதனம் போன்றது. பல விருதுகளை நான் பெற்றிருந்தாலும் தமிழ்நாடு முதல்வர் கையால் பெற்ற இந்த விருது தனித்தன்மையானது.
அந்த விருதை அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கொடுத்திருக்கிறார். அவர்கள் அறிவியல் துறைக்கு வர ஊக்கத்தொகையை அறிவித்திருக்கிறார். இவை எல்லாம் முக்கியமான மாற்றங்கள். அந்த இளைய சக்தி முன்னால் நாங்கள் விருது பெறுவதால், நாளைய அறிவியல் உலகம் இவர்களால் இன்னும் மேம்படும் என்கிறார்
அரசு வேலை கவுரவம் என்றால், அரசுப் பள்ளி அதைவிட கவுரவம்தானே!












Click it and Unblock the Notifications