SPB Birthday: எஸ்பிபி பிறந்தநாள் இன்று.. ரசிகர்கள் நினைவிடத்திற்கு வரவேண்டாம் என சரண் கோரிக்கை!
சென்னை: மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்துக்கு ரசிகர்கள் வர வேண்டாம் என்று அவரது மகன் எஸ்பிபி சரண் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாமரைப்பாக்கத்தில் அமைந்துள்ள எஸ்பிபி நினைவிடத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி அனுமதி இல்லை என எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய குரலால் கட்டிப்போட்டு வைத்தவர் எஸ்பி.பாலசுப்பிரமணியம். அவரது 79வது பிறந்தநாள் இன்று. பாடகர் மட்டுமல்லாது நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வந்தார் எஸ்பிபி.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் விஸ்வநாதன் இசையில் பாட ஆரம்பித்த எஸ்பிபி, ஜிவி பிரகாஷ், அனிருத் வரை அனைவரது இசையிலும் பாடல்கள் பாடி இருக்கிறார். இளையராஜா, தேவா, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் என கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய ஒரே பாடகர் என்ற பெருமை பெற்றவர் எஸ்பிபி.
ஆறு முறை தேசிய விருது, நான்கு முறை பிலிம்பேர் விருது, 25 முறை ஆந்திர அரசின் நந்தி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது ஆகியவற்றையும், கோடிக்கணக்கான ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றவர் எஸ்பி பாலசுப்ரமணியம்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றார் எஸ்பிபி.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ரசிகர்கள் வரவேண்டாம் என்று அவரது மகன் எஸ்பிபி சரண் கேட்டுக் கொண்டுள்ளார். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு கருதி ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications