இது லைவாக போகுது! அந்த வார்த்தையை பேசலாமா? ராஜகண்ணப்பனை கண்டித்த சபாநாயகர் அப்பாவு
சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதத்தின் போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய கருத்துக்கு சபாநாயகர் ராஜகண்ணப்பன் கடுமையாக விமர்சித்தார். மேலும் அமைச்சர்கள் பேசும் போது கவனமாக பேசுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. அதன்படி அவை கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் இரு வேளைகளும் பல்வேறு துறை மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அவை தொடங்கியது முதல் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து கொண்டு அவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அமளியில் ஈடுபட்டதால் அவர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். அது போல் இன்று சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டதால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டார். அப்போது முதல்வர் பேசுகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த மத்திய அரசுதான் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் தமிழகத்திலும் நடத்த முடியும். எனவே உங்கள் கூட்டணி கட்சியிடம் போய் பேசுங்கள்.
விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றலாம். அதற்கு உறுப்பினர் மணி ஆதரவு அளிக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை அவைக்குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கிவிட்டார்.
அவர் பேசுகையில், இந்தந்த சமூகங்களில் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அறிய ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது தேவை. அதை மத்திய அரசு செய்ய வேண்டும். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவினர், ஜாதிவாரி கூட்டணி குறித்து வலியுறுத்த வேண்டும்.
இந்தியா கூட்டணியின் ஆணிவேர் என்பது நமது முதல்வர் ஸ்டாலின்தான். இது ராகுல் காந்திக்கும் தெரியும். இங்கு வாக்களிப்பது உதயசூரியன் சின்னத்திற்கும் கைச் சின்னத்திற்கும்தானே ஒழிய நபர்களுக்கு இல்லை. கூட்டணி கட்சியில் இருந்தாலும் யார் நிற்கிறார்கள் என்று பார்த்துதான் மக்கள் வாக்களிப்பார்கள்.
இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் என பேசிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு உறுப்பினர் ஏதோ சொல்ல (அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை பயன்படுத்த கூடாது) அதற்கு சர்ச்சைக்குரிய வார்த்தையை ராஜகண்ணப்பன் தெரிவித்தார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "இந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன். அமைச்சர்கள் இது போல் பேசக் கூடாது. இந்த சட்டசபை நிகழ்வுகளை மக்கள் நேரலையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சர்கள் எதை பேச வேண்டுமானாலும் கவனத்துடன் பேச வேண்டும் என சபாநாயகர் கண்டித்தார். மேலும் பேசிய ராஜகண்ணப்பன், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும் ஆதி திராவிடர்களுக்கு 18 சதவீதமும் பழங்குடியின மக்களுக்கு ஒரு சதவீதமும் அருந்ததியினருக்கு 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த சட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி. எனவே சமூகநீதி என்பது கருணாநிதிக்கு மட்டுமே சொந்தமானது. இவ்வாறு ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications