வெளியே அவ்வளவு சண்டை! ஆனா சட்டசபையில் எடப்பாடிக்கு அருகே ஓபிஎஸ்! இன்று இருக்கை விவகாரத்தில் தீர்வு?
சென்னை: இன்று தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கூடும் நிலையில், இதில் எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இருக்கை விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை இப்போது அக்கட்சி முழுக்க எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. இதுவரை ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகள் எதிலும் அவருக்கு ஆதரவான தீர்ப்பு வரவில்லை.

இருப்பினும், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஓ பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்ட இருக்கையே தொடர்கிறது. இந்த விவகாரத்தில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு சட்டசபை: தமிழ்நாடு கர்நாடகா இடையே கடந்த பல காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. கர்நாடக பகுதிகளில் அளவு கடந்து மழை பெய்தால் மட்டுமே நீரைத் திறந்துவிடுவதைக் கர்நாடகா வாடிக்கையாக வைத்துள்ளது. மற்ற காலங்களில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய உரிய நீரைத் தராமல் பிரச்சினை செய்தே வருகிறது. இந்தாண்டும் கூட அதை நிலை தான். காவிரி நீரைத் தரக் கர்நாடக அரசும், அம்மாநிலத்திலுள்ள அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே இன்று தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஒரு வாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய உடன் முதலில் மறைந்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்து தீர்மானம் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
அதிமுக: இது ஒரு பக்கம் இருக்க அதிமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்து வருகிறது. சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு அருகிலேயே ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இருக்கை ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்தாண்டு அதிமுகவில் நடந்த சம்பவங்கள் அனைவருக்கும் தெரியும். அதிமுக செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு, அதில் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஆரம்பத்தில் முஷ்டியை முறுக்கினாலும் கூட அதன் பிறகு ஓபிஎஸ்ஸால் எதுவும் செய்ய முடியவில்லை. பெரும்பாலான தலைவர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி பக்கமே இருந்தது. ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகளிலும் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரவில்லை.
இருக்கை விவகாரம்: அதேபோல சட்டசபையிலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். ஆர்.பி.உதயகுமார் புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதிமுக தரப்பில் இது தொடர்பாகச் சபாநாயகருக்கும் கடிதம் தரப்பட்டுள்ளது. அதாவது இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு அருகிலேயே ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்போது அவரை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதால் அங்கே ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது அதிமுக கோரிக்கை. இருப்பினும், சட்டசபையில் இருக்கை ஒதுக்கீடு என்பது சபாநாயகரின் தனிப்பட்ட முடிவு என்றே சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து கூறியிருந்தார். இதற்கிடையே இது தொடர்பாக அதிமுகவினர் அண்மையில் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்தும் முறையிட்டனர். இதையடுத்து இது தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications