ஆரம்பமே அதிரடி.. எனக்கு வானளாவிய அதிகாரம்லாம் இல்லைங்க.. சபாநாயகர் அப்பாவு பேச்சு
சென்னை: எனக்கு வானளாவிய அதிகாரம் கிடையாது எனக் கூறியுள்ளார் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு.
ராதாபுரம் தொகுதியிலிருந்து திமுக சார்பில் வென்ற, அப்பாவு, சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரில் சபாநாயகராக வீற்றிருந்து அவையை வழி நடத்த ஆரம்பித்துள்ளார் அப்பாவு.
கொரோனா அறிகுறி இருந்தால் குப்புறப்படுத்து நல்லா ரெஸ்ட் எடுங்க - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
கடந்த 2016ம் ஆண்டு, சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றவர் அப்பாவு. வாக்கு எண்ணிக்கை மையத்தில் இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பியபோது, துணை ராணுவப் படையினரால் வெளியே பிடித்து தள்ளி விடப்பட்டவர் அப்பாவு.
தள்ளி விடப்பட்டவர்
இப்போது அடுத்த தேர்தலில் வென்று, சட்டசபையையே கட்டுப்படுத்தும் சபாநாயகராக மாறியுள்ளார். வெளியே தள்ளப்பட்டவர் இன்று அவையை ஆள்கிறார் என்பது எப்பேர் பட்ட வளர்ச்சி என நெட்டிசன்கள் புகழ்ந்துரைக்கிறார்கள். நெல்லை தமிழில் அப்பாவு அவையை வழிநடத்துவதை கேட்கவே சுவாரசியமாக இருக்கிறது என்கிறார்கள் எம்எல்ஏக்கள்.
வானளாவிய அதிகாரம் இல்லை
இந்த நிலையில்தான், இன்று சட்டசபையில் சபாநாயகராக பதவியேற்றார் அப்பாவு. துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றார். பின்னர் சபாநாயகர் இருக்கையிலிருந்தபடி பேசிய அப்பாவு, எனக்கு வானளாவிய அதிகாரம் கிடையாது. சட்டசபைக்குதான் அந்த அதிகாரம் உள்ளது. தனிப்பட்ட நபருக்கு அதிகாரம் இருப்பதாக நான் கருதுவது இல்லை. அனைத்து கட்சியினரும் பேச உரிய நேரம் ஒதுக்கித் தரப்படும். கட்சி பேதமின்றி அவையை நடத்திச் செல்வேன் என்றார்.
பி.எச்.பாண்டியன் அதிரடிகள்
தற்போது ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனோஜ் பாண்டியன். இவரது தந்தை பி.எச்.பாண்டியன். இவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது சபாநாயகராக இருந்த சமயம், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர். நெல்லையின், இடி முழக்கம் என புனைப்பெயரில் அழைக்கப்பட்டவர். 10 திமுக எம்எல்ஏக்களை சபையிலிருந்து வெளியேற்றியது, வார இதழ் ஆசிரியரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது என பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தவர். நாட்டின் எந்த நீதிமன்றமும் தன்னை கட்டுப்படுத்த முடியாது, வானளாவிய அதிகாரம் தனக்கு (சபாநாயகர்) இருப்பதாக முழங்கியவர்.
பதில்
இந்த நிலையில்தான் அதே நெல்லை சீமையிலிருந்து சபாநாயகராக பதவியேற்றுள்ள அப்பாவு, தனக்கு வானளாவிய அதிகாரம் இல்லை என மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். சட்டசபையே பெரிது என்று அப்பாவு கூறியுள்ளார்.