இது மோடிக்கு ஸ்டாலின் எழுதிய “லெட்டர்”.. பொய் சொல்வதே பாஜக வேலை! மத்திய அமைச்சருக்கு டிஆர்பி பதில்
சென்னை: புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக எதிர்க்கவில்லை என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்த நிலையில் பொய் சொல்வதே பாஜகவுக்கு வேலை என திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாக தகுதியான மாணவர்களை உருவாக்கி முடியும்." என்று தெரிவித்தார்.
புதிய தேசிய கல்விக்கொள்கை இதற்காகவே கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் கல்வியின் தரம் நன்றாக இருக்கிறது. புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்தவிதமான கருத்தையும் மத்திய அரசிடம் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கவில்லை. புதிய தேசிய கல்விக்கொள்கை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை.

தமிழ்நாடு அரசு
புதிய கல்விக்கொள்கையில் சில முரண்பாடுகள் இருப்பதாக தமிழ்நாடு அரசு கருத்து தெரிவித்து உள்ளது. புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாக புதிய கல்விக்கொள்கையை நாங்கள் நிச்சயம் அமல்படுத்துவோம். புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

தாய் மொழிக்கே முக்கியத்துவம்
புதிய தேசிய கல்விக்கொள்கையில் உள்ள மூன்றாவது மொழி இந்தி உள்ளிட்ட வேறு எந்தமொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தாய் மொழிக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். புதிய கல்விக்கொள்கையை இந்தியை திணிக்கவில்லை. மாநிலங்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி கல்விக்கொள்கையை வடிமைக்கிறார்கள். ஆனால் அது தரமானதா என்பதை ஆராய வேண்டும்.

கல்வித்தரம்
புதிய கல்விக்கொள்கை தரமானது அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதன் மூலமாக மாணவர்களின் கல்வித்தரம் மேலும் உயரும். தேர்ச்சியை அடிப்படையாக கொண்டு கல்வி வழங்கும் விதத்தை முடிவு செய்யலாம். மத்திய மாநில அரசுகள் புதிய கல்விக்கொள்கை குறித்து பேசி வருகின்றன." என்றார்.

டி.ஆர்.பி. ராஜா ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா, "முற்றிலும் தவறான செய்தி!!! கடந்த 17.6.21 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதமைச்சர் அவர்கள் மாண்புமிகு பிரதமரை நேரடியாக சந்தித்து தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக எதிர்த்து கடிதம் கொடுத்துள்ளார் ! இதோ அதற்கு சாட்சி! தினந்தோறும் பொய்க் கதைகளை கூறுவதே பாஜக வின் வேலையாக உள்ளது !!!" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications