முதல்வர் ஸ்டாலினைக் காக்கும் பெண் புலிகள்! - யார் இவர்கள்? எப்படி வந்தார்கள்?
சென்னை: முதலமைச்சரைப் பாதுகாக்கும் படையை 'கோர் செல்' என்று சொல்வார்கள். அந்தப் பாதுகாப்புப் பணியில் காலங்காலமாக ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறார்கள். அந்தப் பழைய மரபை முதன் முறையாக உடைத்து எறிந்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
தனது பாதுக்காப்பு படையை முழுமையாகப் பெண்கள் கையில் ஒப்படைத்திருக்கிறார். இது தமிழ்நாடு பார்க்காத விசயம் மட்டும் அல்ல; இந்தியாவே இதுவரை சந்திக்காத மாபெரும் மாற்றம்.

இந்தப் பாதுகாப்புப் படையில் மொத்தம் 9 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அதுவும் துப்பாக்கியும் கையுமாக இந்தப் பெண்கள் முதல்வர் செல்லும் இடம் எல்லாம் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டப்பாறை சேர்ந்தவர் தனுஷ் கண்ணகி, "இப்போதுதான் CM security CoreCell பணிக்கு முதன்முறையாகப் பெண்களை எடுத்திருக்கிறார்கள். அதில் முதல் சப் இன்ஸ்பெக்டரே நான் தான். என்னுடன் எட்டு பெண் காவலர்கள் இருக்கின்றார்கள். அதில் நான்தான் முதல் எஸ்.ஐ என்பது எனக்குப் பெருமிதமாக இருக்கிறது" என்ற அறிமுகத்துடன் பேசத் தொடங்குகிறார்.

"முதலமைச்சருக்குப் பாதுகாப்பு தருவதுதான் எங்களின் பணி. நாங்கள் தலைமைச்செயலகத்தில் பணியில் இருப்போம். அதன்பிறகு அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருப்போம். அடுத்து முதல்வர் எங்கெங்கு எல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் நாங்கள் பணிசெய்வோம்.
ஒரு இடத்திற்கு சி.எம். போகிறார் என்றால் அவர் செல்வதற்கு 3 மணிநேரம் முன்னால் நாங்கள் அங்கே சென்றுவிடுவோம். அங்குச் சென்று பாதுகாப்பு அம்சங்கள் எப்படி உள்ளது? அங்கே யார் யார் இருக்கிறார்கள்? முறையாக அனைத்து பாதுகாப்புப் பணிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என ஆராய்வோம். எல்லாம் சரியாக உள்ளது என உறுதி செய்த பிறகு, முதல்வர் வருகைக்குச் சமிக்ஞை தருவோம்" என்கிறார் இந்தப் பெண்புலி தனுஷ் கண்ணகி.

இவரைவிட மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமியக் குடும்ப பின்புலத்திலிருந்து இந்த CoreCell பணிக்கு வந்துள்ளார் எம்.தில்ஷா பேகம். இவர் திருச்சி மாவட்டம் கலைஞர் நகரைச் சேர்ந்தவர். எப்படி உணர்கிறார் அவர்?
"இந்த வேலையில் இருப்பது உண்மையில் எனக்குப் பெருமையான விசயம். எங்கள் குடும்பத்திலேயே காவல்துறை பணிக்கு வந்த முதல் பெண் நான் தான். அதைவிட அப்பா வழியிலும் அம்மா வழியிலும் சேர்த்து அரசு வேலைக்கு வந்த முதல் ஆளும் நான்தான்.

கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோதே இந்த வேலை எனக்குக் கிடைத்தது. போலீஸ் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் இந்த வேலைக்கு வந்தேன்" என்கிறார்.
தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சின்னக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த இந்தப் பெண் இன்று தமிழ்நாட்டின் Most Powerful Place என்று சொல்லக் கூடிய அதிகாரம் மிக்க ஓர் இடத்திற்கு உயர்ந்து வந்திருக்கிறார்.

ஆண்கள் பார்த்து வந்த வேலையில் முதன்முதலாகப் பெண்களை நியமிக்கும் போது என்ன மாதிரியான உடையை இவர்களுக்கு வழங்கலாம் என அதிகாரிகள் விவாதித்தனர். அதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின், 'ஆண்களுக்கு என்ன உடை வழங்கப்படுகிறதோ அதே உடையைப் பெண்களுக்கும் அளிக்கும்படி' உத்தரவிட்டுள்ளார்.
அதன்பொருட்டு இந்தப் பெண்புலிகள் இன்று சஃபாரி உடையில் கெத்து காட்டி வலம் வருகின்றனர்.

இந்தப் பணியில் உள்ள ஒரு முக்கிய அம்சம் என்னவெனில் பெண்கள் பலரும் நகரப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் இல்லை. மிகவும் பின் தங்கிய கிராமங்களிலிருந்து வந்தவர்கள். அதிலேயே சமூகநீதி பேணப்பட்டுள்ளது. அதற்குச் சான்று இந்த கௌசல்யா. இவர் தருமபுரி மாவட்டம் சின்னகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்.
"எங்கள் கிராமத்தில் முதல் பெண் காவலர் நான் தான். ஆகவே அக்கம்பக்கத்தினர் பலரும் 'இந்த வேலை ஒத்துவராது வேண்டாம்' என்று தடுத்தார்கள். அம்மாவுக்கும் சின்ன தயக்கம் இருந்தது. அப்பாதான் தைரியம் கொடுத்து அனுப்பினார்" என்கிறார்

காவல்துறையில் பெண்கள் இடம்பெற வேண்டும் என்பதற்குத் தமிழ்நாட்டில் முதல் விதையைப் போட்டவர் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி. அவர் காவல்துறையின் கதவைப் பெண்களுக்காகத் திறந்துவைத்தார்.
அதில் ஒருபடி முன்னேறிச் சென்று இன்று ஸ்டாலின் முதல்வரைப் பாதுகாக்கும் பொறுப்பையே பெண்கள் கையில் கொடுத்திருக்கிறார்.

மிகப் பின்தங்கிய திருவண்ணாமலை மாவட்டம் அடையாளம் கிராமத்திலிருந்து வந்திருக்கிறார் சுமதி. அவர், "நான் சின்ன வயது முதலே அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அப்போது முதலே காவல்துறைதான் என் கனவு" என்கிறார்.

திருவண்ணாமலையே பின் தங்கிய மாவட்டம் என்றால் ராமநாதபுரம் மாவட்டம் பற்றிச் சொல்லவே வேண்டாம். அங்குள்ள தேவிப்பட்டினத்தில் இருந்து முதல்வரைப் பாதுகாக்கும் பணிக்கு வந்துள்ளவர் பவித்ரா.

"ஊரில் தண்ணீர் பிடிக்க அம்மா சென்றால் கூட பொதுமக்கள் பலர் என்னைத்தான் விசாரிப்பார்கள். 'முதல்வரைப் பக்கத்திலிருந்தே உன் மகள் பார்க்கிறார்' என்று பெருமையாகச் சொல்வார்கள். அந்த மரியாதையை முதல்வர் ஸ்டாலின் தான் எனக்குத் தந்துள்ளார்" என்கிறார்.
அடுத்து மோனிஷா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் வீரனகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த மாவட்டம் பற்றி பலரும் அறிவார்கள். இவரது ஊரில் பல பெண் காவல்கள் இருந்துள்ளனர். ஆனால் திருமணத்திற்குப் பின் அவர்கள் யாரும் பணியைத் தொடரவில்லை என்கிறார் இவர். இவரது அப்பாதான் ஊக்கம் அளித்து இப்பணிக்குப் போகும்படி நம்பிக்கை அளித்திருக்கிறார்.

இவர்களை எல்லாம் விட மாநிலம் தாண்டி மாநிலம் வந்துள்ளார் வித்யா. இவர் புதுச்சேரி மாநிலம் மடுகரை கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் பெரிய கூட்டுக்குடும்பம். இதுவரை யாரும் பட்டதாரி ஆகவில்லை. அரசு வேலைக்கும் வந்ததில்லை. இவர்தான் முதல் பட்டதாரி, முதல் அரசு ஊழியர்.
இத்தனை சிறப்புகளைத் தாண்டி இதில் இன்னும் ஒரு ஆச்சரியமான ஒரு செய்தி உள்ளது. அது என்னவென்றால் இந்த 9 பேருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள்.















Click it and Unblock the Notifications