கோயம்பேட்டில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்.. சபரிமலை செல்வோருக்கு ஹாப்பி நியூஸ்!
சென்னை: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூசை நாட்களில் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். இந்த நாட்களில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிவார்கள். தோராயமாக சுமார் 5 கோடி பக்தர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனை தரிசிக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள்தான் அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நேற்று பிற்பகல் திறக்கப்பட்டது. இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது. எனவே, தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய புறப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தர்களுக்கு வசதியாக சில சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பாகவும், வசதியுடன் சென்று திரும்பும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. தவிர கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி நேற்று இந்த பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் இது குறித்து கூறுகையில், "பேருந்து இருக்கைகளை டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிச.27 முதல் டிச.30 மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் டிச.26 முதல் 29-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. மேலும், விவரங்களுக்கு 94450 14452, 94450 14424, 94450 14463 எனும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
பக்தர்களுக்கு இருக்கைகள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி அல்லாத அதிநவீன சொகுசு பேருந்துககள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருப்பது ஐயப்ப பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications