வீக் எண்ட் + முகூர்த்த நாள்! சொந்த ஊர்களுக்கு பறந்த மக்கள் - பேருந்து நிலையங்களில் இரவு செம கூட்டம்
சென்னை: மூகூர்த்த தினம் மற்றும் வார இறுதி நாட்களின் காரணமாக நேற்று 800 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு இயக்கி இருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் பேருந்து நிலையங்கள் கூட்டம் அலைமோதியது.
பொதுவாக வார இறுதி நாட்கள் என்றாலே பொதுமக்கள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் முகூர்த்தி தினம் என்பதால் இந்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளன.

எனவே உறவினர்கள் திருமணத்துக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராக இருந்தனர். தனியார் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நேற்று 800 அரசு பேருந்துகளை அரசு இயக்கி உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "வார இறுதி நாள்கள் மற்றும் முகூா்த்த தினங்களை முன்னிட்டு, சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏராளமானோா் பயணம் செய்வாா்கள். இதனால், தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 400 பேருந்துகள், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முக்கிய இடங்களுக்கும், பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 பேருந்துகள் என மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வார இறுதியில் பயணிக்க இதுவரை 23 ஆயிரத்து 626 போ் முன்பதிவு செய்து உள்ளனா். இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் முன்பதிவு செய்த பயணிகள் ஏராளமானோர் நேற்று அரசு சிறப்பு பேருந்துகளின் மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். ஞாயிறு அன்று அவர் மீண்டும் திரும்பி செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications