பள்ளிகள் திறப்பு நெருங்கும் நேரத்தில் பஸ் கிடைக்குமா? “நோ டென்ஷன்”.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
சென்னை : தமிழ்நாட்டில் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்கிருந்து எவ்வளவு பேருந்துகள் இயக்கப்படும் என்பதை பார்க்கலாம்.
பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் குறையாததால், ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு நெருங்கும் நிலையில், வெளியூர் சென்றிருந்தவர்கள் வரும் நாட்களில் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்குத் திரும்ப உள்ளனர்.

இதனால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் நிலவும் என்பதை கருத்தில் கொண்டு, 2200 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். இந்த வார இறுதி நாட்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த வருடம் பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்க இருப்பதால் இந்த வார இறுதி நாட்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கூடுதலான பயணிகள் தமிழகம் எங்கும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுடன் கூடுதலாக 2200 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருக்கும் 1,300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி மதுரை மற்றும் திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications