இன்று கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்! கோயம்பேட்டிலும் பஸ் ஏறலாமே!
சென்னை: பவுர்ணமி தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு மக்கள் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் பிற மாவட்டங்களில் இருந்து ரயில், பேருந்து மூலம் திருவண்ணாமலைக்கு வருகை தருவர். இதனால் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இதனால் இன்று சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தினமும் இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 330 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 225 பேருந்துகள் இயக்கப்படும்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாளை திருவண்ணாமலைக்கு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.
அது போல் பயணிகளின் கோரிக்கைகளுக்குகேற்ப பவுர்ணமி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தற்பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு 23/05/2024 முதல் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும் மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். ஆக மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவற்றில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு 24.5.2024 முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டும் பரிசோதனை முறையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வந்தவாசி வழியாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் மற்றும் ஆற்காடு ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே பயணிகள் மேற்படி பேருந்து வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications