Exclusive: வீட்டை தலையில் தூக்கிப் போக முடியுமா... எல்லோரும் வரட்டும் சார்.. கே.ஜெயக்குமார் எம்.பி.
சென்னை: டெல்லியில் மத்திய அரசு தனக்கு ஒதுக்கியுள்ள வீட்டில், தமிழகத்தில் இருந்து வரும் யார் வேண்டுமானாலும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம் என கூறியிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. கே.ஜெயக்குமார்.
நேர்காணல், கல்வி, சுற்றுலா, மருத்துவம், என எந்தக் காரணத்திற்காக தமிழகத்தை சேர்ந்தவர்கள் டெல்லி வந்தாலும் தனது இல்லத்தில் இலவசமாக தங்கி வந்த பணியை முடித்துக்கொள்ளலாம் என பெருந்தன்மை காட்டியிருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக நம்மிடம் பிரத்யேகமாக பேசிய அவர்,

டெல்லி வருகை
''தமிழகத்திலிருந்து டெல்லிக்கு வருபவர்கள் தங்குவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். ரயில்நிலையத்தில் இருந்து எங்கு செல்வது எனத் தெரியாமல் பலரும் தவிப்பதை நானே பார்த்திருக்கிறேன். நான் எம்.பியாகிய பிறகு கட்சிக்காரர்களும் சரி, தொகுதி மக்களும் சரி எத்தனையோ பேர் பல்வேறு காரணங்களுக்காக டெல்லிக்கு வந்துவிட்டு எங்கு தங்குவது எனத் தெரியாமல் என்னை அழைத்து உதவி கேட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு இல்லத்தில் அறை வாடகை செலுத்த பணம் இல்லை சார் நீங்க கொஞ்சம் உதவுங்க என இந்த இரண்டு ஆண்டுகளில் பலரும் கேட்டிருக்கிறார்கள்.''

சவுத் அவென்யூ
''இந்நிலையில் தான் எனக்கு டெல்லியில் கதவு எண் 116, சவுத் அவென்யூ என்ற முகவரியில் மத்திய அரசு அண்மையில் வீடு ஒதுக்கியது. இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்ததாலும், நீர் ஆதார நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக இருப்பதாலும் சீனியர் கேட்டகிரியில் எனக்கு சற்று பெரிதாக வீடு ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. 6 அறைகளை கொண்ட இந்த வீட்டில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து யார் டெல்லி வந்தாலும் இலவசமாக தங்கிக்கொள்ள அனுமதித்தேன்.''

வேலை தேடி
''இப்போது அதையும் கடந்து தமிழகத்திலிருந்து யார் டெல்லி வந்தாலும் எனது வீட்டில் இலவசமாக தங்கிக்கொள்ளலாம். இதற்காகவே கேர் டேக்கர் ஒருவரை ஊதியம் கொடுத்து அங்கு பணியமர்த்தியிருக்கிறேன். பெரும்பாலும் வேலை தேடித்தான் தமிழக இளைஞர்கள் டெல்லிக்கு வருகிறார்கள். அவர்கள் கையில் பணம் இருக்குமா இருக்காதா என எனக்குத் தெரியாது. அதனால் காலை உணவை மட்டும் எனது ஏற்பாட்டில் கொடுத்துவிடுகிறேன்.''

மக்களுக்கு பயன்
''குறைந்தபட்சம் 3 நாட்கள் தங்கலாம், தொடர்ந்து ஒருவரே அதிக நாட்கள் தங்கினால் அடுத்தடுத்து வருபவர்கள் தங்குவதற்கு சிரமமாக இருக்கும். இந்த உலகத்தில் போகும் போது யாரும் எதையும் எடுத்துப் போவதில்லை, அப்படியிருக்கும் போது வீட்டை மட்டும் தலையிலேயா தூக்கிப் போகப் போகிறோம், மக்கள் பயன்பெறட்டும் சார், மக்களுக்கு பயனுள்ள வாழ்க்கையை வாழத்தானே அரசியலுக்கு வந்தேன்'' என தனது பெருந்தன்மை குணத்தை பகிர்ந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications