பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர் கவனிங்க! சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் முன்பதிவு எப்போது?
சென்னை: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஜனவரி 12 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கிளம்பும் சிறப்பு ரயில்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
பண்டிகை காலங்களில் பொதுவாக, சென்னையில் இருந்து அதிக பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம். மேலும் சிலர் இந்த கூட்ட நெரிசலின் ஆபத்தை உணராமல் ரயில் படிகளில் தொங்கிய வண்ணம் பயணிக்கின்றனர். இந்த ஆபத்தை தவிர்க்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அந்தவகையில், எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. இடையே ஜனவரி 13 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டால் சனி, ஞாயிறு உடன் சேர்த்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இந்நிலையில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
எனவே, பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், "வண்டி எண் 06190 - தாம்பரத்தில் இருந்து திருச்சி மற்றும் வண்டி எண் 06191 - திருச்சியில் இருந்து தாம்பரம் வரை சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.
ஜன் சதாப்தி சூப்பர் ஃபாஸ்ட் ஸ்பெஷல் என பெயரிடப்பட்ட ரயில் திருச்சி முதல் தாம்பரத்துக்கும், அதே நாளில் தாம்பரம் முதல் திருச்சிக்கும் ஜனவரி 4, 5,10, 11, 12, 13, 17, 18 மற்றும் 19ஆம் தேதிகளில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலானது காலை 5.35 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து கிளம்பி தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு வழியாக 12.30 மணிக்கு திருச்சி செல்லும்" என்று அறிவித்துள்ளது.
பின்னர் மாலை 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பி 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இவை இயக்கப்படுவதால் பொங்கல் விடுமுறைக்கு சென்று திரும்புவதற்கு பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜனவரி 13 ஆம் தேதியில் சிறப்பு ரயில் (எண்: 06093) இயக்கப்படும். தாம்பரத்தில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
சென்னை தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு ஜனவரி 11,13,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06103) இயக்கப்படும். தாம்பரத்தில் முதல் நாள் மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.
சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 13,20,27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06091) இயக்கப்படும். தாம்பரத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோயிலுக்கு ஜனவரி 12,19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06089) இயக்கப்படும். சென்ட்ரலிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் பகல் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் எனத் தெரிவிகப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications