மகளிர் உரிமைத் தொகை.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!.. சிறப்பு திட்ட செயலர் அறிவுறுத்தல்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் ஆகஸ்ட் 19 மற்றும் 20ம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல விண்ணப்பதாரர்கள் கவனத்தில்கொள்ள வேண்டி முக்கியமான விஷயம் குறித்தும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறைச் செயலர் தாரேஷ் அகமது கூறியுள்ளார்.
பெண்களின் உழைப்பு குறித்து பேசவே இந்த சமூகம் ஒரு காலத்தில் தயங்கியது. ஆனால் தற்போது இதற்கான நிலைமை மாறியிருக்கிறது. குடும்ப தலைவிகளாக இருக்கும் பெண்களின் உழைப்பு அளப்பரியது என நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. என்னதான் ஆண் வெளியில் சென்று சம்பாதித்து வந்தாலும் கூட வீட்டில் குழந்தைகளை வளர்ப்பது, வீட்டை பராமரிப்பது, சேமிப்பு ஆகியவற்றை பெண்கள்தான் மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களது உழைப்பு கணக்கிடப்படுவதே கிடையாது. ஆண்கள் எப்படி போய் சம்பாதித்து வந்தாலும் அந்த பணத்தில் சேர்த்த சொத்தில் பெண்களுக்கும் சம பங்கு இருக்கிறது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

இப்படியாக தங்கள் உழைப்புக்கான மதிப்பு எங்கே? என்று பெண்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்தான் அரசியல் கட்சிகள் குடும்ப தலைவிக்கான உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. அந்த வகையில் குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது.
இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் உரிமைத்தொகை இன்னும் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இது குறித்து பேசி விமர்சிக்க தொடங்கினர். சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
நிலைமையை கவனித்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பையடுத்து இதற்கான தயாரிப்பு பணிகளை துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்காது. மாறாக இதனை பெற சில அளவுகோல்களை அரசு அறிவித்துள்ளது. இப்படியாக தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்ட முகாம் ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரையும் நடைபெறுகிறது. அந்த வகையில் கடந்த 4ம் தேதி முதல்கட்ட சிறப்பு முகாம் முடிவடைந்தது.
தற்போது மக்களிடம் பூர்த்தி செய்து வாங்கப்பட்ட சுமார் 80 லட்சம் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட முகாம் 5ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இது ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது ஏற்கெனவே பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பணத்தை பெறுவது தொடர்பாக பெண்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன. அதில் பலரும் அடிக்கடி எழுப்பும் கேள்வி, இந்த முகாம்களை தவறவிட்டுவிட்டால் என்ன செய்வது என்பதுதான்.

இதற்கு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலர் தாரேஷ் அகமது விளக்கமளித்துள்ளார். அதில், "இரண்டு கட்ட முகாமகளை தவறவிட்டவர்களுக்கு ஆகஸ்ட் 19 மற்றும் 20ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். அதில் விண்ணப்பிக்கலாம்" என்று கூறியுள்ளார். அதேபோல, "விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சில இடங்களில் கள ஆய்வும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்" என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஒருவேளை அளிக்கப்படும் தகவல்கள் போலியானதாக இருக்கும்பட்சத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டால் விண்ணப்பதார் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications