மார்பில் மிதித்து, முட்டி போட வைத்து சித்ரவதை செய்த மனோவின் மகன்கள்! ஆந்திரா விரைந்தது தனிப்படை
சென்னை: 16 வயது சிறுவன் உள்பட இருவரை உருட்டுக்கட்டையால் தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்கள் ஆந்திராவில் உள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.
சென்னை ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், உணவு வாங்க சென்ற கிருபாகரன் ஆகியோரை மனோவின் மகன்கள் ரஃபி, ஷாகீர் ஆகியோர் முட்டி போட வைத்து உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாக புகார் எழுந்தது.

இந்த தாக்குதல் குறித்து மனோவின் மகன்களுக்கு எதிரான வீடியோ ஆதாரம் வேறு கிடைத்துள்ளது. இதையடுத்து ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆனால் மனோவின் இரு மகன்கள் உள்பட 3 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள். அவர்கள் ஈசிஆரில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து நேற்று முன் தினம் முதல் அவர்களை தேடி வருகிறார்கள். அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனினும் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து போலீஸார் தேட முயற்சித்து வருகிறார்கள்.
அவர்களது செல்போன் சிக்னல் மாறி மாறி காட்டி வருவதால் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அந்த வகையில் இன்று 3ஆவது நாளாக அவர்களை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் பாடகர் மனோவின் மகன்கள் ஆந்திராவில் உள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.
நேற்றெல்லாம் ஈசிஆரில் தேடி வந்த நிலையில் இன்றைய தினம் ஆந்திராவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications