சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்.. இனி ஈஸியாக போகலாம்
சென்னை: விஜயதசமி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி பொதுமக்களின் வசதிக்காக இருமார்க்கமாக சென்னை - திருச்சி இடையே வாரம் 5 நாட்கள் இயங்கும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
விஜயதசமி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு அதிகமாக செல்வார்கள்.

அதேபோல் பிற இடங்களில் வசிப்போர் சென்னையில் உள்ள உறவினர்களை பார்க்க செல்வார்கள்.இதனால் ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் பூஜை நாட்கள், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை - திருச்சி, திருச்சி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 11ம் தேதி முதல் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் திருச்சி - தாம்பரம் சிறப்பு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06190) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடைய உள்ளது.
மறுமார்க்கமாக அதேபோல் வரும் 11ம் தேதி முதல் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் தாம்பரம் - திருச்சி சிறப்பு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (06191) இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சியை வந்தடையும். இந்த ரயில்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இயங்காது.
இந்த ரயில்கள் இருமார்க்கமாக தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது என தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications