இன்று தமிழ் புத்தாண்டு.. சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு... கோயில்களில் கட்டுப்பாடுகள் என்ன?
சென்னை: இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று சித்திரை 1ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் ஒன்றுகூடினால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், கோயிலுக்கு வரும் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
கொரோனா நெறிமுறைகள்
மேலும், கோயிலில் பக்தர்கள் கொரோனா நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தேவையான நடவடிக்கைகள் அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோயிலில் தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில்
இந்நிலையில், இன்று காலை 3 மணி முதலே உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனை வழிபாடு செய்ய நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கக் கவசமும் வைர கிரீடமும் சாத்தப்படும்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை
இன்று காலை 6 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 4 கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமனித இடைவெளி
இங்கு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பெரும்பாலும் மாஸ்க்குகளை அணிந்துள்ளனர். இருப்பினும், கோயில்களில் யாரும் தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதை உறுதி செய்யவும் முறையான அதிகாரிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.