இலங்கை நாடாளுமன்ற தேர்தல்..தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி! மதிமுக வைகோ கடும் அதிர்ச்சி
சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை இடங்களை விட அதிக இடங்களை பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையும் கவலையையும் தருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இலங்கையில் கடந்த செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த அனுரா குமாரா திசநாயக்க வெற்றி பெற்று அதிபர் ஆனார். தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவடைந்தது. வாக்கு பதிவு முடிவடைந்ததும் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 225 இடங்களில் 113 இடங்கள் தேவை என்று நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 159 இடங்களை பெற்றது.
சமகி ஜன பலவேகயா கட்சி 40 தொகுதிகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 5 தொகுதிகளையும் வென்றது. இலங்கை மக்கள் முன்னணி வெறும் 3 தொகுதிகளையும் பெற கட்சிகள் 18 தொகுதிகளையும் பெற்றது. இதுவரை நடந்த தேர்தல்களில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை தமிழர் கட்சிகள் கைப்பற்றி வந்த நிலையில் முதன் முறையாக தேசிய கட்சியான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி மகா சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையும் கவலையையும் தருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," மிகக் கொடூரமான தமிழினப் படுகொலைக்கு ராஜபக்சே அரசு காரணம் என்றாலும், ஈழத்தமிழர் பிரச்சினையில் சிங்கள இனவாத வெறிகொண்ட ஜே.வி.பி. கட்சியினுடைய குரலாக, தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு வந்தவர்தான் இன்றைய அதிபர் அநுர குமார திசநாயகா. அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி, ஜே.வி.பி.யினுடைய மறு பதிப்பாகும்.
தொடக்கத்திலிருந்தே தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற கொலைவெறி நோக்கம் கொண்டவர்தான் திசநாயகா. இலங்கையில், நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில், அவரது கட்சி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள். 1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டபோது, தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்றும், 13 ஆவது சட்டத் திருத்தத்தை ஏற்கக் கூடாது என்றும் சிங்கள இனவெறியினுடைய கருத்தாக தொடர்ந்து கூறிவந்தவர் திசநாயகா.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவரும் அவர்தான். சுனாமிப் பேரலை இலங்கையைத் தாக்கியபோது, தமிழர்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கக் கூடாது என்று பகிரங்கமாக கூச்சலிட்டவர்தான் திசநாயகா. இந்திய அரசு தொடர்ந்து சிங்கள அரசையே ஆதரித்து வந்திருக்கின்ற நிலையை இனிமேல் மாற்றிக் கொள்ள வேண்டும். சிங்கள இராணுவம் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். சிறையில் அடைபட்டுள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும். தமிழினப் படுகொலையை நடத்திய சிங்கள அரசு மீது அனைத்துலக நாடுகளின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதற்கு முந்தைய அதிபர்கள் தமிழர்களுக்கு எதிராக கொடும் குற்றங்களை செய்திருந்தாலும், அவர்களைவிட சிங்கள வெறிபிடித்தவர்தான் இன்றைய அதிபர். நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக இடங்களில் வெற்றி பெற்று இருப்பதால், கொடிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர அவர் முற்படுவார். சிங்கள அரசோடு மிகுந்த அக்கறையோடு உறவு கொண்டுள்ள இந்திய மோடி அரசு, இனிமேலாவது ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் சிங்கள ஆதரவு நிலையை எடுக்கக் கூடாது.
ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசு, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களை நாசமாக்கி, அவர்களது உயிர்களையும் பறித்த சிங்கள அரசு பன்னாட்டு நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தப்படுகிற வரை, சுயநிர்ணய உரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகுவாழ் தமிழர்களும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கும், பன்னாட்டு நீதி விசாரணை நடத்துவதற்கும் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும்; அழுத்தம் தர வேண்டும்.
தமிழர்கள் சிந்திய இரத்தத்தையும், உயிர்ப்பலியையும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, தீக்குளித்து உயிர்களையும் தந்த தியாகத்தை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. தமிழீழத்தில் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். பாலஸ்தீனத்திற்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் இந்திய அரசும், ஏனைய நாடுகளின் அரசுகளும் ஈழத்தமிழர் பிரச்சினையில் மட்டும் துரோகம் செய்வது ஏன்?
தமிழ்நாட்டுத் தமிழர்களும், உலகுவாழ் புலம்பெயர் தமிழர்களும் நம் இனத்தைக் காப்பாற்ற ஒன்றுபட்டு உலக அரங்கில் குரல் எழுப்ப வேண்டும். இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.
ஈழத்தமிழர் பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் தமிழீழத்தை ஆதரிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications