"திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வராது!" வெடிக்கும் சனாதன சர்ச்சை.. உதயநிதிக்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி
சென்னை: சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி சமீபத்தில் சட்டசபையில் கூறியிருந்த நிலையில், அது இப்போது விவாதமாக வெடித்துள்ளது. பல்வேறு தரப்பும் உதயநிதி பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே உதயநிதி பேச்சுக்கு ஹோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரக்கூடாது எனவும் கூட விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இப்போது மீண்டும் சனாதனம் குறித்து பேச்சு எழுந்துள்ளது. முன்னதாக கடந்த 2023ல் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி, "சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா போன்றது; அதை ஒழிக்க வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் ஒரு மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உதயநிதிக்கு எதிராகப் போராட்டம் தொடங்கி, நீதிமன்ற வழக்குகள் வரை கூட தொடரப்பட்டது.

சனாதனம்
அன்று தொடங்கிய அந்தச் சர்ச்சை, இப்போது தேர்தல் முடிந்து ஆட்சி மாறிய பின்னரும் ஓயவில்லை. இதற்கிடையே மீண்டும் சட்டசபையிலேயே சனாதனம் குறித்து உதயநிதி பேசியிருந்தார். "சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்" என்பதை மிகத் தெளிவாக உதயநிதி குறிப்பிட்டார். இது இப்போது மீண்டும் விவாதமாக வெடித்துள்ள சூழலில், இது குறித்து சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை தொடர்ந்து தாக்கிப் பேசினாலும், தெய்வ பக்தி கொண்ட தமிழ் இந்து மக்கள் மத்தியில் ஏன் கோபம் ஏற்படவில்லை? இதற்குக் காரணம் மொழி என்று நான் நம்புகிறேன். தமிழ் மொழியில் 'சனாதனம்' என்ற சொல் அன்றாடப் புழக்கத்தில் இல்லை. பெரும்பாலான தமிழர்களுக்கு இந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாது. சிறுவயதில் எனக்கே இந்த வார்த்தை தெரியாது.
மறுபுறம், 'தர்மம்' என்ற சொல் தமிழில் மிகவும் பிரபலம். தமிழ்நாட்டில் தர்மபுரி என்ற மாவட்டமே உள்ளது. 'அறம்' என்ற சொல்லும் தர்மம் என்ற அதே பொருளில் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. சுவாரஸ்யமாக, இந்தியில் 'தரம்' என்றால் பொதுவாக மதம் என்று பொருள். இந்து மதம் என்றால் 'இந்து தரம்' அல்லது 'சனாதன தரம்' என்றும், கிறிஸ்துவ மதம் என்றால் 'ஈசாய் தரம்' என்றும் அழைப்பார்கள். ஆனால், தமிழ் வழக்கப்படி 'தர்மம்' என்று சொன்னால் அது இந்தியில் உள்ள 'இந்து தர்மத்தையே' குறிக்கும்.
கோபம் ஏன் இல்லை
இப்போது உதயநிதி தமிழில் 'தர்மம்' என்பதைத் தாக்கியிருந்தால் (அதன் பொருள் இந்து மதம்), அவர் 'அதர்மத்தைப்' பரப்புவதாகக் கூறி மக்கள் மத்தியில் பெரும் கண்டனத்தைச் சந்தித்திருப்பார். அதனால்தான், தமிழில் அதிகம் அறியப்படாத 'சனாதனம்' என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்து அவர் பேசுகிறார்
அவரது இந்த 'தீவிர' முயற்சியால், இப்போது அந்த வார்த்தையைத் தமிழிலும் அவர் பிரபலமாக்கி வருகிறார். இதன் மூலம் ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் மிகப் பெரிய திமுக எதிர்ப்பு வாக்குகளை அவர் இன்னும் அதிகமாக்கியுள்ளார். திமுக தனது சொந்த பலத்தில் ஒருபோதும் மெஜாரிட்டி பெற்றதில்லை; அதற்குக் காரணம் இந்து தெய்வங்களைத் தொடர்ந்து அவர்கள் தாக்கி வருவதுதான். அதிமுக ஒருபோதும் அதைச் செய்ததில்லை, அதனால் அந்த எதிர்ப்பு வாக்குகளை அவர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
தவெக
இப்போது, திமுகவிற்கு எதிரான புதிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அதிமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்தாலும், திமுக அளவுக்கு அதிகமான பணத்தைச் செலவழித்தாலும், திமுகவிடம் வலுவான கூட்டணி இருந்தும் அதை எல்லாம் தாண்டி தவெகவிடம் திமுக இந்தத் தேர்தலில் தோற்றுவிட்டது. திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உதயநிதி உறுதியாக இருக்கிறார். அவரது அந்த விருப்பத்தை அழிவில்லாத 'சனாதன தர்மம்' நிறைவேற்றட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications