வேங்கைவயல் போல ஶ்ரீமதி மரண வழக்கு சிபிசிஐடி குற்றப்பத்திரிகை-திமுக அரசுக்கு சிபிஎம் கடும் எதிர்ப்பு!
சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு அதன் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது கனியாமூர் மாணவி ஶ்ரீமதி மரண வழக்கில் மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்கி இருக்கும் சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு திமுகவின் கூட்டணி கட்சியான சிபிஎம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிபிஎம் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி ஒன்றில், 2022-ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று, மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கில் பல்வேறு முரணான தகவல்கள் வெளிப்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகத்தையும் வழக்கில் உள்ளடக்கி
முறையாக விசாரிக்க வலியுறுத்தி அனைத்து தரப்பினரும் போராடினர்.

மாணவியின் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மாணவியின் தாயார் செல்வி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்த அதே தேதியில் ஜூலை 17 அன்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையை அனைத்து தரப்பாருமே கண்டித்தனர்.
ஶ்ரீமதி தாயார் செல்வி முதல் குற்றவாளியா?
இதனைத் தொடர்ந்து விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றமே இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த வன்முறை தொடர்பாக விசாரித்த சிபிசிஐடி போலீசாரின் குற்றப்பத்திரிகையில் 916 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும், அதில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் செல்வி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
ஶ்ரீமதி தாயாரை மிரட்டுவதா?
ஜூலை 13 அன்று மகளை இழந்து நீதிக்காக போராடி வந்த ஒருவர் 4 நாட்கள் இடைவெளியில் இவ்வளவு பெரிய வன்முறையை உருவாக்கினார் என்று சொல்வது நம்பத்தகுந்ததல்ல. மாணவி மரணத்திற்கு நியாயம் கேட்கும் வழக்கில் குடும்பத்தினர் உறுதியாக உள்ள நிலையில் இவ்வாறு குற்றம் சாட்டுவதும் ஒருவகையான மிரட்டலாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
விடுதலை செய்த நீதிமன்றம்
தனியார் பள்ளி நிர்வாகத்தினர் சந்தேக அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்ட சமயத்தில், எந்த விசாரணையும் இல்லாமலேயே பள்ளி நிர்வாகத்திற்கு நற்சான்று கொடுத்து விடுதலை செய்தது நீதிமன்றம். அப்போதும் காவல்துறை அந்த பிணை உத்தரவை கேள்வி எழுப்பவில்லை. இப்போது கலவரம் தொடர்பான வழக்கில், தவறு செய்தவர்களோடு நியாயம் கேட்டு போராடியவர்களையும் குற்றவாளியாக சேர்த்திருக்கிறார்கள்.
ஆட்சியர், எஸ்பியையும் விசாரிக்க வேண்டும்
மேலும், "ஜூலை 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பெருந்திரளாக மக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களை பார்த்திருந்த காவல்துறைக்கு ஜூலை 17 அன்று நடந்த போராட்டம் குறித்த எந்த தகவலும் தெரியாதது ஆச்சரியம்தான். தெரியாதா அல்லது உளவுத்துறைக்கு தெரிந்தும் இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, விசாரணையை நான்கு நாட்கள் தாமதப்படுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தோம். இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
ஶ்ரீமதி தாயாரின் போராட்டத்தை முடக்க சதி
மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனை எதிர்த்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டுமென்று மாணவியின் தாயார் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். தாயாரின் இந்த போராட்டத்தை முடமாக்க
வேண்டுமென்றும், யாரையோ காப்பாற்றுவதற்காக வன்முறைச் சம்பவம் நடந்த இடத்தில் இல்லாத ஸ்ரீமதியின் தாயார் மற்றும் அப்பாவி மக்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடுத்துள்ளது இவ்வழக்கை முடமாக்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டதாகும். இந்தப் போக்கு வழக்கு விசாரணையை முற்றாக திசைத்திருப்பி, தவறு செய்தவர்கள் தப்பிக்கவே வழிவகுக்கும்.
70 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்
அதுமட்டுமின்றி சிபிசிஐடி போலீசார் வன்முறை நடந்த இடத்தில் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள், அவ்வழியாக சென்றவர்கள், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என அப்பாவி பொதுமக்கள் மீதும், அப்பகுதியில் வாழும் ஏராளமான பொதுமக்கள் மீதும் வழக்குத் தொடுத்தனர். சுமார் 60-70 பேர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவையெல்லாம் மோசமான அராஜக நடவடிக்கையாகும்.

நீதிபதி தலைமையில் விசாரணை குழு
மாவட்ட நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் செய்த தவறுகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. சிபிசிஐடி காவல்துறையினரின் நடத்தைகள், பள்ளி நிர்வாகத்தின் தரப்பையும், மாவட்ட நிர்வாகத்தையும் காப்பாற்றி மாணவியின் மரண வழக்கை சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இந்த போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே, பாரபட்சமற்ற நீதியை உறுதி செய்ய பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில்
விசாரணைக் குழு அமைத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
வேங்கைவயல் சர்ச்சை
இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாக அறிவித்திருந்தது பெரும் சர்ச்சையானது. வேங்கைவயல் குற்றப்பத்திரிகைக்கு திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஶ்ரீமதி மரண வழக்கு குற்றப்பத்திரிகையும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
அதிகமாக ஆசைப்படும் கமல்ஹாசன்? மநீமவிற்கு எத்தனை தொகுதிகள்? திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக கூட்டணி .. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்












Click it and Unblock the Notifications