800 உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு விருது.. ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தை மறக்க முடியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் நிகழவிருந்த மிகப்பெரிய கோர விபத்தை தவிர்த்த ரயில்வே ஊழியருக்கு மத்திய அரசின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வெள்ளத்தின் போது செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பெரும் விபத்தைத் தடுத்து சுமார் 800 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு ரயில் சேவா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் தேசிய அளவில் "அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்" (Ati Vishisht Rail Seva Puraskar) என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இந்திய அளவில் 100 சிறந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தெற்கு ரயில்வேயை சேர்ந்த 6 ஊழியர்கள் மற்றும் 2 ரயில்வே அதிகாரிகள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை கோட்டத்தில் முதுநிலை மண்டல மின்பொறியாளர் மஞ்சுநாத் யாதவ் மற்றும் நிலைய கண்காணிப்பாளர் ஜாபர் அலி ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
டெல்லியில் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் 69வது ரயில்வே வார விழாவில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்கி பணியாளர்களை கௌரவிக்க உள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த கனமழை வெள்ளத்தின்போது, டிசம்பர் 17 ஆம் தேதி இரவு 800 பயணிகளுடன் செந்தூர் விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலி (54) ரயில் பாதை வெள்ள நீரில் மூழ்கி இருந்தது பற்றி அலர்ட் தகவலை பெற்றார். இதையடுத்து உடனடியாக ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தடுத்து நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார்.
ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலியின் இந்தச் செயலால் சுமார் 800 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஆனால், ரயில் இரவு நேரத்தில் அங்கு நிறுத்தப்பட்டதால் பயணிகள் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், காலையில் தான் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதைப் பார்த்து, தங்களை காப்பாற்றத்தான் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது எனப் புரிந்துகொண்டனர்.
பின்னர் மீட்புப் படையினர் போராடி பயணிகளை மீட்டனர். உடனடியாக நிலைமையை புரிந்துகொண்டு செயல்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு மத்திய அரசின் ரயில்வே துறையின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாபர் அலிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications