ஸ்டாலினும் அழகிரியும் பேசினார்கள்! ஆமா எப்போது சண்டையிட்டார்கள்? இப்போது சேர்வதற்கு! உதயநிதி கேள்வி
சென்னை: முதல்வர் ஸ்டாலினும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியும் சந்தித்து பேசினர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தயாளு அம்மாளுக்கு இன்று 90-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி கோபாலபுரத்தில் விழாக் கோலம் பூண்டது. கோபாலபுரம் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார்.
அவரை செல்வி உள்ளிட்டோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். இதையடுத்து சில நிமிடங்களில் மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியும் அவரது மனைவி காந்திமதியும் வருகை தந்தனர்.

பின்னர் வீட்டில் கேக் வெட்டி விழா கொண்டாடப்பட்டது. தயாளு அம்மாள், மகன்கள், மருமகள்களுக்கு ஆசி வழங்கினார். 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஸ்டாலினும் அழகிரியும் ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் வந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் முதல்வர் ஸ்டாலினும் மத்திய முன்னாள் அமைச்சர் அழகிரியும் சந்தித்து பேசினர். ஸ்டாலினும் அழகிரியும் எப்போது சண்டையிட்டனர்? இப்போது சேர்ந்து கொள்வதற்கு! என உதயநிதி கேள்வி எழுப்பினார்.
மேலும் திமுகவில் அழகிரி இணைவாரா என்ற கேள்விக்கு உதயநிதி தெரியவில்லை என பதில் அளித்தார். 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும் அழகிரி புதிய கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தொடங்கவில்லை. அவர் எப்படியாவது திமுகவில் இணைந்துவிட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார்.
அழகிரிக்கு தென் மண்டலத்தில் செல்வாக்கு அதிகம் உள்ளதால் தேசிய கட்சிகள் அவரை கட்சியில் இணைத்து கொள்ள தீவிரம் காட்டின. ஆனால் அவர் போகவில்லை. இந்த நிலையில் உதயநிதி தனது பெரியப்பாவை சந்தித்து வந்ததிலிருந்தே திமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
ஏனென்றால் உதயநிதியும் துரை அழகிரியும் அருள்நிதியும் இணக்கமாகவே உள்ளனர். அடுத்த கட்ட தலைவர்களான உதயநிதி அமைச்சராகிவிட்டார். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் துரை அழகிரிக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக தயாளு அம்மாளின் பிறந்த நாள் விழா இருந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் மகன் அழகிரியை மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ள தயாளு அம்மாள், செல்வி உள்ளிட்டோர் போராடினர். ஆனால் கருணாநிதி பிடிகொடுக்கவில்லை. எனவே இந்த முறை முதல்வர் ஸ்டாலினிடம் தயாளு அம்மாளும் செல்வியும் பேசியிருப்பார்கள் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications