"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்
கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையில் போட்டியிட வைத்துள்ளதற்கான காரணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கரூரில் இன்று தெரிவித்தார். செந்தில் பாலாஜி கடந்த முறை கரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறார். செந்தில் பாலாஜியின் தொகுதி மாற்றம் அரசியல் அரங்கில் பெரிதும் கவனிக்கப்பட்ட நிலையில் அதற்கான காரணத்தைக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் இன்று மாலை கரூரில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கரூர் மாவட்டம், ராயனூர் திடலில் நடந்த திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் இளங்கோவன், கிருஷ்ணராயபுரம் தொகுதி வேட்பாளர் சி.கே. ராஜா, குளித்தலை தொகுதி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் மற்றும் கரூர் தொகுதி வேட்பாளர் தியாகராஜன் ஆகியோருக்கு வாக்குகள் சேகரித்தார்
திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், "கரூரை பொறுத்தவரை எனக்கு எந்தக் கவலையும் இல்லை. காரணம், இது செந்தில் பாலாஜி மாவட்டம். திமுக கூட்டணி வெற்றியை ஏற்கனவே செந்தில் பாலாஜி உறுதி செய்துவிட்டார். பல சோதனைகளை தாண்டி சாதனை படைப்பவர் அவர். கோவை, கரூர் இரண்டும் நம் வசம்தான். ஏன் தமிழ்நாடு மொத்தமும் நாம் தான்.
கரூர் செந்தில் பாலாஜியின் மாவட்டம் அதுனால 100% வெற்றி உறுதி. எனவே அவரை கோவை நிற்கச் சொல்லி பொறுப்பு கொடுத்திருக்கிறேன். கோவை செந்தில் பாலாஜியின் புகுந்த வீடுதான். பிறந்த வீடான கரூரை அவர் மறக்கமாட்டார். கரூர் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவை மிகப்பெரிய எழுச்சியாக பார்க்கிறேன். திராவிட மாடல் 2.O வெற்றி விழாவுக்கு தயாரா?
சொல்லாத வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளோம். கரூர் என்றால் கழக ஊர். கலைஞர் முதன்முதலில் வென்ற தொகுதி குளித்தலை. கரூர், கோவை மட்டுமின்றி மொத்த தமிழ்நாடும் நாமதான். ஒரு பக்கம் சாதனைகள், மறுபுறம் புதிய புதிய திட்டங்கள், இதுதான் திராவிட மாடல். திமுக ஆட்சியில் தமிழ்நாடே அமைதியாக இருக்கிறது.
இதனைப் பார்த்து அதிமுகவும், பாஜகவும் பதற்றம் அடைகிறது. 10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை இருளுக்குள் தள்ளி, தமிழ்நாட்டை அதிமுக பின்னுக்கு தள்ளியிருந்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை நாசப்படுத்திய அதிமுக ஆட்சியை அகற்றி 2021ல் திராவிட மாடல் ஆட்சியை அமைத்தோம். அதிமுக- பாஜகவின் சதி திட்டங்கள் சந்தி சிரிக்கிறது. அவர்கள் சதி திட்டம் தவிடுபொடியாகிவிட்டது. டபுள் என்ஜின், டப்பா என்ஜின் என்று கூறி தமிழ்நாட்டை சீரழித்து யாரும் உள்ளே வர முடியாது" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications