ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
சென்னை: நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அஞ்சல் தலை, நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற காந்தியடிகளின் 157-வது பிறந்த நாள் நிகழ்ச்சியின்போது, எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் காந்தியின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்" என புகழாரம் சூட்டியுள்ளார்.
அதோடு, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி, பாரதமாதா உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒருபுறம் தேசியச் சின்னம், மறுபுறம் பாரதமாதா சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பது போலவும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பாரதமாதாவை வணங்குவது போலவும் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் வரலாற்றில் நாணயங்களில் பாரதமாதா உருவம் வெளியாவது இதுவே முதல்முறை என்றார்.
ஆர்.எஸ்.எஸ். முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது. அதில் 1963-இல் குடியரசு தின அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பங்கேற்றதை குறிக்கும் வகையில் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இதனைக் குறிப்பிட்டே முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications