"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரத்தில் கடிதத்தை வெளியிட்டதிலேயே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் குட்டு அம்பலமாகிவிட்டது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார். இது மக்களை திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டி இருந்தார்.

அதற்கு, அப்படி பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நெல்லுக்கு தமிழக அரசு தரும் ஊக்கத்தொகையை நிறுத்த மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து அந்த கடிதத்தை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசியல் ஆதாயம் தேடுவதே முதல்வர் ஸ்டாலினின் நோக்கம் என்று விமர்சித்து இருந்தார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட நிர்மலா சீதாராமன், "மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கடிதத்தை வெளியிட்டதிலேயே அமைச்சர் நிர்மலா சீதாராமனின் குட்டு அம்பலமாகிவிட்டது என்று கூறி உள்ளார். மேலும் பினராயி விஜயனின் பதிவை மேற்கோள் காட்டியும் அதில் பதில் அளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "நிதியமைச்சர், தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது.
மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது. கடந்த பிப்ரவரி மாதம், கேரளா முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து வெளியிட்ட பதிவே இதற்குச் சாட்சி." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications