முதலமைச்சர் நாற்காலியில் உட்காருவேன் என்று நான் கனவில் கூட நினைத்தது இல்லை! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
சென்னை: முதலமைச்சர் நாற்காலியில் உட்காருவேன் என்று நான் கனவில் கூட நினைத்தது இல்லை என ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;
''கலைஞர் தன்னுடைய மூத்த பிள்ளை என்று சொன்ன முரசொலியை முழுவதுமாக படியுங்கள். பள்ளிக் காலங்களிலேயே நான் நாள்தோறும் முரசொலியை முழுமையாக படிக்கத் தொடங்கினேன். இந்த மேடையில் இருப்பவர்களும் அப்படித்தான். முரசொலிதான் என்னை உருவாக்கியது. எங்களை உருவாக்கியது. உங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

மக்களை நாடகக் கொட்டகைக்கு - திரையரங்கிற்கு - பொதுக் கூட்டத்திற்கு - மாநாட்டுத் திடலுக்கு அழைத்துக் கொண்டு வந்த காலம் முன்பு இருந்தது. இப்போது, மக்களின் உள்ளங்கைக்கே நம்முடைய கருத்துகளை எடுத்துச் செல்கிற வாய்ப்பை, தொழில்நுட்பம் ஏற்படுத்தி தந்திருக்கிறது.
பேஸ்புக் - யுடியூப் - வாட்ஸ்அப் - ட்விட்டர் - இன்ஸ்டாகிராம் - ஷேர்சாட் - டெலிகிராம் என்று எல்லா சமூக ஊடகங்களையும் நம்முடைய கொள்கைகளை பரப்பவும், கழக வளர்ச்சிக்காகவும் - நம்முடைய சாதனைகளை எடுத்துச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாள்தோறும் ஏதாவது பொய் சொல்லி, இல்லாததை ஊதிப் பெரிதாக்கி, அது பற்றியே நாம் பேச வேண்டும் என்ற சதி செய்பவர்களின் கருத்துகளுக்கு யாரும் முக்கியத்துவம் தராதீர்கள். நான், இந்த முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பதால் பெருமை கொள்பவன் இல்லை. நாட்டுக்கு நன்மை செய்கிற இடத்தில் நான் இருக்கிறேனே என்று பெருமைப்படுகிறேன்.
அண்ணாவும், கலைஞரும் உட்கார்ந்த முதலமைச்சர் நாற்காலியில் நான் உட்காருவேன் என்று நான் கனவில்கூட நினைத்தது இல்லை. அவர்களை போன்று இந்த நாட்டுக்கும், இனத்துக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று நினைத்து நான் நாள்தோறும் உழைத்தேன். அதனால், இந்த உயர்வைப் பெற்றேன்.
இது தனிப்பட்ட என்னுடைய ஆட்சி இல்லை; பல நூற்றாண்டுகளாக ஒரு இனம் தாங்கி நிற்கிற கொள்கைகளை அந்த மக்களின் ஆதரவோடு செயல்படுத்துகிற திராவிட மாடல் ஆட்சி இது.''












Click it and Unblock the Notifications