நிர்வாக பணிகளுக்கு தான் ஓய்வே தவிர.. சமூக பணிக்கு ஓய்வல்ல! சைலேந்திர பாபுவுக்கு ஸ்டாலின் கடிதம்!
சென்னை: நிர்வாக பணிகளுக்கு தான் ஓய்வே தவிர, சமூக பணிக்கு ஓய்வல்ல எனக் கூறி சைலேந்திர பாபுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பான முதல்வர் ஸ்டாலினின் கடிதம் வருமாறு;
அன்புள்ள சைலேந்திரபாபு அவர்கட்கு,
வணக்கம்.
கடமை உணர்ச்சியும் கம்பீரமும் கொண்ட சகோதரர் திரு.சைலேந்திரபாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணி ஓய்வு பெற்றுச் செல்லும் இன்றைய தினம் என்பது தங்களது நிர்வாகப் பணிகளுக்கான ஓய்வே தவிர, சமூகப் பணிக்கான ஓய்வல்ல என்பதைத் தாங்களும் அறிவீர்கள். அந்த வகையில் எதிர்வரும் காலத்திலும் தங்களது சமூக சேவையைத் தொய்வின்றித் தொடரும் என நம்புகிறேன்.
சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்றோம். அதன்பின், தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றுவதற்கு தங்களது சிறப்பான செயல் திட்டங்களே காரணமாக அமைந்தன. தமிழ்நாட்டை ஓர் அமைதியான மாநிலமாக வழிநடத்திக் காட்டியதன் மூலமாக, இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்கவும், தொழில் துறையில் பல்லாயிரக்கணக்கான முதலீடுகளை ஈர்க்கவும் இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டது.

சட்டம் ஒழுங்கைப் பேணிக் காத்து, குற்றங்களைக் குறைத்து, நடைபெற்ற குற்ற நிகழ்வுகளில் உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெறச் செய்து - தமிழ்நாட்டின் காவல் நிர்வாகத்தை திறம்பட நடத்திக் காட்டியது தங்களது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
தங்களது இரண்டு ஆண்டுப் பணி என்பது, தமிழ்நாட்டுக்கு பல்லாண்டு காலம் நினைவுகூரக் கூடிய பணியாக அமைந்திருந்தது. பல்துறை ஆற்றல் கொண்ட தாங்கள், தொடர்ந்து இந்த மாநிலத்துக்கும் மனித குல மேம்பாட்டுக்கும் தொடர்ந்து சேவை புரிந்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புமிகு நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications